திருவொற்றியூர்: மணலி புதுநகர் அய்யா வைகுண்ட தர்மபதி 190வது ஆண்டு அவதார திருநாள் விழா மணலில் நடந்தது. விழாவை முன்னிட்டு, சென்னை மற்றும் புறநகர் பகுதியில் உள்ள அய்யா வைகுண்ட தர்மபதி பக்தர்கள் பழைய வண்ணாரப்பேட்டை ராமநாயக்கன் தெருவில் உள்ள தங்கக்கிளி திருமண மண்டபத்தில் 2 குதிரைகள் பூட்டிய அலங்கார சாரட் வண்டியில் அய்யா அருளிச்செய்த அகில திரட்டு ஆகமத்தை வைத்து சுமந்து செல்லும் வாகனத்தை பின்தொடர்ந்து ஊர்வலமாக சென்றனர். முன்னதாக, ஊர்வலத்தை சமத்துவ மக்கள் கழக தலைவர் எர்ணாவூர் நாராயணன், லதா நாராயணன் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.
செங்கொடி ஏந்தியபடி ஏராளமான பக்தர்கள் நல்லப்பவாத்தியார் தெரு, ராமானுஜர் தெரு, திருவொற்றியூர் நெடுஞ்சாலை வழியாக சென்று அய்யா வைகுண்ட தர்மபதியை கோயிலை அடைந்தனர். ஊர்வலம் செல்லும் வழியில் டி.எஸ்.எஸ்.நாடார் ஐக்கிய சங்க தலைவர் ஆர்.பி.மனோகரன் மற்றும் நிர்வாகிகள் பக்தர்களை வரவேற்று சிற்றுண்டி வழங்கினர். வழிநெடுகிலும் உபயதாரர்கள் பக்தர்களுக்கு நீர், மோர் வழங்கினர்.