×

ஐஎஸ்எல் கால்பந்து சென்னையின் எப்சியை வீழ்த்தி அரையிறுதிக்கு கொல்கத்தா தகுதி

கோவா:12 அணிகள் பங்கேற்றுள்ள 8வது இந்தியன் பிரிமியர் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து தொடர் கோவாவில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த 105வது லீக் போட்டியில் சென்னையின் எப்சி-கொல்கத்தா அணிகள் மோதின. விறுவிறுப்புடன் நடந்த இந்த போட்டியில் முதல் பாதியில் 45வது நிமிடத்தில் கொல்கத்தா வீரர் ராய் கிருஷ்ணா கோல் அடித்து 1-0 என முன்னிலை ஏற்படுத்தினார்.
2வது பாதியில் இதற்கு பதிலடி கொடுக்க சென்னை வீரர்கள் கடுமையாக போராடினர். ஆனால் கடைசி வரை பலன் கிடைக்கவில்லை. இதனால் 1-0 என்ற கோல் கணக்கில் கொல்கத்தா அணி வெற்றி பெற்றது.

19வது போட்டியில் 10வது வெற்றியை பெற்ற கொல்கத்தா (7 டிரா, 2 தோல்வி) 37 புள்ளிகளுடன் பட்டியலில் 2வது இடத்தை பிடித்து அரையிறுதிக்கு தொடர்ந்து 2வது ஆண்டாக முன்னேறியது. ஏற்கனவே ஜாம்ஷெட்பூர், ஐதராபாத் அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றுவிட்டன. இன்னும் ஒரு அணி எது என்பதில் கேரளா, மும்பை சிட்டி எப்சி இடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. மும்பை கடைசி லீக் போட்டியில் நாளை ஐதராபாத்தையும், கேரளா 6ம் தேதி எப்சி கோவாவையும் எதிர்கொள்கிறது. இதன் முடிவை பொறுத்து ஒரு அணி தேர்வாகும். சென்னையின் எப்சி 20 போட்டிகளில் 5 வெற்றி, 5 டிரா, 10 தோல்வி என 20 புள்ளிகளுடன் 8வது இடத்தை பிடித்து பரிதாபமாக வெளியேறியது. இன்று இரவு 7.30 மணிக்கு ஜாம்ஷெட்பூர் எப்சி-ஒடிசா எப்சி அணிகள் மோதுகின்றன.



Tags : Kolkata ,ISL Football Chennai FC , ISL Football, Chennai, Fall, Semi-Final, Kolkata
× RELATED ஆசிரியர் பணி நியமன ஊழல் வழக்கு; 24,000...