குமரி: அய்யா வைகுண்டரின் 190வது அவதார தினவிழாவையொட்டி நாகர்கோவிலில் இருந்து சுவாமி தோப்புக்கு நடைபெற்ற பிரம்மாண்ட ஊர்வலத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றார்கள். நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் இருந்தும் கேரளாவில் இருந்தும் அய்யா வைகுண்டரின் அவதார தினவிழாவிற்கு பங்கேற்க வந்த பக்தர்கள், நாகர்கோவில் நாகராஜா திடலில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டனர். வழிநெடுகிலும் அய்யா வழி பக்தர்கள் அரகர சிவசிவ என்று கூறிய வண்ணம் காவிக் கொடியை கையில் பிடித்தவாறு ஊர்வலத்தில் சென்றார்கள். முத்துக்குடையுடன் அய்யாவின் பல்லக்கை ஊர்வலத்தில் பக்தர்கள் எடுத்து சென்றனர்.
ஊர்வலம் நாகராஜா திடலில் இருந்து புறப்பட்டு மணிமேடை சந்திப்பு, மீனாட்சிபுரம் கோட்டாறு ரயில்வே சாலை, இடலாக்குடி ஆணைப்பாலம், கரியமாணிக்கபுரம் வழியாக சுவாமி தோப்பு சென்றது. ஊர்வலத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர். கன்னியாகுமரி மாவட்ட சுவாமி தோப்பில் அய்யா வைகுண்டரின் தலைமை பதி உள்ளது. அய்யா வைகுண்டரின் அவதார தினவிழாவையொட்டி ஒவ்வொரு ஆண்டும் நாகர்கோவிலில் இருந்து சுவாமி தோப்பு தலைமை பதிக்கு அய்யா வழி பக்தர்கள் நடைபயணமாக ஊர்வலம் செல்வது வழக்கம். அய்யா வைகுண்டரின் அவதார தினவிழாவை ஒட்டி இன்று கன்னியாகுமரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.