×

உக்ரைனில் சிக்கி தவிக்கும் தமிழக மாணவர்களை அழைத்து வர எம்பிக்கள் திருச்சி சிவா, கலாநிதி வீராசாமி, அப்துல்லா, எம்எல்ஏ டி.ஆர்.பி.ராஜா பயணம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு

சென்னை: உக்ரைனில் சிக்கி தவிக்கும் தமிழக மாணவர்களை அழைத்து வர தமிழக எம்பிக்கள் திருச்சி சிவா, கலாநிதி வீராசாமி, எம்.எம்.அப்துல்லா, எம்எல்ஏ டி.ஆர்.பி.ராஜா ஆகியோர் நேரில் செல்ல முதல்வர் மு.க.ஸ்டாலின்  உத்தரவிட்டுள்ளார். உக்ரைனில் சிக்கி தவிக்கும் தமிழ்நாட்டை சார்ந்த மாணவர்கள் மற்றும் புலம்பெயர்ந்தோரை தமிழகத்திற்கு அழைத்து வருவது தொடர்பாக கடந்த 24ம் தேதி முதல் எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து, அரசு உயர் அதிகாரிகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று தலைமை செயலகத்தில் ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில் தலைமை செயலாளர் இறையன்பு, பொதுத்துறை செயலாளர் ஜெகந்நாதன், அயலக தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வு ஆணையர் ஜெசிந்தா லாசரஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: முதல்வர் மு.க.ஸ்டாலின் ஏற்கனவே அறிவுறுத்தியதன் அடிப்படையில், உக்ரைனில் உள்ள தமிழ்நாட்டை சார்ந்த மாணவர்கள் மற்றும் புலம் பெயர்ந்தோரை மீட்டு, பாதுகாப்பாக தமிழகத்திற்கு கொண்டுவர மாநில, மாவட்ட அளவில் மற்றும் டெல்லியில் தொடர்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டு, அவர்கள் இப்பணிகளை மேற்கொள்ள ஏதுவாக அவசர கட்டுப்பாட்டு மையங்கள் தொடங்கப்பட்டுள்ளன. இந்த அவசர கட்டுப்பாட்டு மையங்களில் இதுவரை 3,025 தொலைபேசி அழைப்புகளும், 4,390 மின்னஞ்சல்களும் பெறப்பட்டுள்ளன.

அதன் அடிப்படையில், தமிழ்நாட்டை சார்ந்த 2,223 மாணவர்கள் தொடர்பான விவரங்கள் தொகுக்கப்பட்டு, ஒன்றிய வெளியுறவு துறை அமைச்சகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு, அவர்களை மீட்டு, தாயகம் அழைத்துவர விரைந்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும், தமிழ்நாடு அரசின் சார்பில் அந்த மாணவர்களோடு உக்ரைன் நாட்டிலுள்ள மாகாணங்கள் வாரியாக தொடர்புகள் ஏற்படுத்தப்பட்டு, மாணவர்களின் பாதுகாப்பை தொடர்ந்து உறுதி செய்து வருவதோடு, அவர்களை விரைந்து மீட்டு கொண்டு வருவதற்கான தேவையான தொடர் நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன.  

மீட்பு தொடர்பான ஒருங்கிணைப்பு பணிகளை தமிழ்நாடு அரசுடன் ஒன்றிணைந்து விரைந்து மேற்கொள்ள ஏதுவாக, ஒன்றிய அரசின் சார்பாக ஒருங்கிணைப்பு அலுவலர் ஒருவரை நியமனம் செய்திடுமாறு முதல்வர், ஒன்றிய அரசை கேட்டுக் கொண்டதன் அடிப்படையில், ஒன்றிய அரசின் தொலைதொடர்பு அமைச்சக செயலாளர் கே.ராஜாராமன் ஒருங்கிணைப்பு அலுவலராக நியமனம் செய்யப்பட்டு, மீட்புப் பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. நேற்று (3ம் தேதி) காலை 6 மணி வரை தமிழ்நாட்டை சார்ந்த 193 மாணவர்கள் தாய்நாடு திரும்பியுள்ள நிலையில், தமிழ்நாடு அரசின் செலவில் அவர்கள் தங்களது சொந்த மாவட்டங்களுக்கு சென்றடைய உரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. முதல்வர் மு.க.ஸ்டாலின், உக்ரைனில் சிக்கி தவிக்கும் தமிழ்நாட்டை சார்ந்த எஞ்சியுள்ள மாணவர்களை உடனடியாக மீட்பதற்கு தேவையான கீழ்க்காணும் நடவடிக்கைகளை மேற்கொள்ள அலுவலர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்கள்.

அதன் விவரம் பின்வருமாறு:  
* உக்ரைன் கிழக்கு பகுதியில் அதிகமாக தமிழ்நாட்டு மாணவர்கள் தங்கியிருப்பதால், அவர்களை ரஷ்ய நாட்டின் எல்லை வழியாக அழைத்து வருவதற்கு ஒன்றிய அரசின் வெளியுறவு துறை அமைச்சகத்தின் மூலம் தொடர்ந்து தொடர்புகொண்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும்.
* தமிழ்நாட்டு மாணவர்களுடன் தொடர்ந்து தொடர்பில் இருந்து, அவர்களை மீட்க மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து அவர்களுக்கு தெரிவித்து, வழிநடத்தி அழைத்து வரவேண்டும்.
* உக்ரைன் அண்டை நாடுகளான ஹங்கேரி, ருமேனியா, போலந்து மற்றும் சுலோவாகியா ஆகிய நாடுகளில் தற்காலிகமாக அடைக்கலம் புகுந்துள்ள தமிழ்நாட்டு மாணவர்களை உடனடியாக சிறப்பு விமானங்கள் மூலமாக தமிழ்நாட்டிற்கு அழைத்து வருவதற்கு உரிய ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும். தமிழக மாணவர்களை விரைந்து அழைத்து வருவதற்கு ஏதுவாக, மேற்படி நாடுகளுக்கு சென்று, அங்குள்ள இந்திய தூதரகங்களுடன் ஒருங்கிணைந்து உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள தமிழ்நாட்டை சார்ந்த எம்பிக்கள் திருச்சி சிவா, கலாநிதி வீராசாமி, எம்.எம்.அப்துல்லா மற்றும் எம்எல்ஏ டி.ஆர்.பி.ராஜா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.  இவர்களுடன் 4 ஐஏஎஸ் அதிகாரிகளும் இணைந்து சென்று ஒருங்கிணைப்பு பணிகளை மேற்கொள்வார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags : Trichy Siva ,Dr. ,Veerasamy ,Abdullah ,MLA ,DRP ,Raja ,Tamil Nadu ,Ukraine ,Chief Minister ,MK Stalin , MPs Trichy Siva, Dr. Veerasamy, Abdullah, MLA DRP Raja visit to bring Tamil Nadu students stranded in Ukraine: Chief Minister MK Stalin's order
× RELATED முருங்கைக் கீரையின் மருத்துவ குணங்கள்!