திருவள்ளூர்: திருவள்ளூரை அடுத்த வெங்கத்தூர் அமிர்தம் தோட்டத்தில் அமைந்துள்ள வில்வநாத ஈஸ்வரர் ஆலயத்திலும், வெங்கத்தூர் வேதகிரீஸ்வரர் ஆலயத்திலும் மஹா சிவராத்திரி விழா நடைபெற்றது. இந்த விழாவை முன்னிட்டு மணவாளநகர் அ.பித்தன் செட்டியார், த.பிரபு, த.தாமோதரன் ஆகியோர் 2000 பேருக்கு அன்னதானம் வழங்கினர். மணவாளநகர் ஒண்டிகுப்பம் நீர்நிலை நாயகி பெண்ணின் நல்லாள் உடனாகிய கங்கைநாதசவாமி திருக்கோயிலிலும், கண்ணையா நகர், கே.சி.சம்மந்தனார் தெருவில் அமைந்துள்ள மங்கள ஈஸ்வரி உடனுறை மங்கள ஈஸ்வரர் ஆலயத்திலும், திருவள்ளூர் தீர்த்தீஸ்வரர் ஆலயத்திலும், பூங்காநகர் சிவவிஷ்ணு ஆலயத்திலும் மகா சிவராத்திரி விழா வெகுவிமர்சையாக நடைபெற்றது.
திருவள்ளூர் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தின் அருகே உள்ள பழமை வாய்ந்த பொம்மியம்மாள் சமேத முத்தீஸ்வரர் கோயில் உள்ளது. இக்கோயிலில் நேற்று மகாசிவராத்திரி விழா கொண்டாடப்பட்டது. இதை முன்னிட்டு சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்வான நேற்றுமுன்தினம் மாலை 5 மணி அளவில் 41 அடி உயரமுள்ள ராஜ லிங்கத்திற்கு 1008 லிட்டர் பால் அபிஷேகம் செய்யப்பட்டது. அப்போது ராட்சத கிரேன் மூலம் ராஜலிங்கத்தின் மீது பால் ஊற்றி அபிஷேகம் செய்யப்பட்டது. இதனை ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கண்டுகளித்தனர்.