×

அமராவதி வனத்தில் சிகிச்சை பெற்ற சிறுத்தை சத்தியமங்கலம் அனுப்பிவைப்பு

உடுமலை: காலில் காயமடைந்து அமராவதி வனத்தில் சிகிச்சை பெற்று வந்த சிறுத்தை, சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. திண்டுக்கல் மாவட்டம் கன்னிவாடி வனச்சரகம் பண்ணப்பட்டி, கோம்பை வனப்பகுதியில் காலில் காயமடைந்து நடக்க முடியாமல் சிறுத்தை ஒன்று அவதிப்பட்டு வந்தது. தகவல் அறிந்து அமராவதி வனச்சரகத்தில் இருந்து சென்ற வேட்டைத்தடுப்பு காவலர்கள் மயக்க ஊசி செலுத்தி சிறுத்தையை பிடித்தனர். பின்னர் கூண்டில் அடைத்து திருப்பூர் மாவட்டம் அமராவதி விடுதிக்கு கொண்டு வந்தனர்.

5 வயதான அந்த ஆண் சிறுத்தைக்கு வனத்துறை மருத்துவர்களான ராஜேஸ், சதாசிவம் ஆகியோர் சிகிச்சை அளித்தனர். இருப்பினும், ஸ்கேன் எடுக்க வேண்டி இருப்பதாலும், மேல் சிகிச்சை அளிக்க வேண்டியதாலும் சிறுத்தையை சத்தியமங்கலம் காப்பகத்துக்கு கொண்டு செல்ல முடிவு செய்யப்பட்டது. அதன்படி, கூண்டுடன் வனத்துறை வாகனத்தில் சிறுத்தை ஏற்றப்பட்டது. தொடர்ந்து நேற்று சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்கு சிறுத்தை கொண்டு செல்லப்பட்டது.

Tags : Satyamangalam ,Amravati forest , Amravati, treatment, leopard, Satyamangalam, sent
× RELATED சத்தியமங்கலம் அருகே விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உயிரிழப்பு