×

தமிழ்நாட்டில் வரும் 4ம் தேதி அதிகனமழை பெய்யும் : ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுத்தது வானிலை ஆய்வு மையம்

சென்னை : தமிழ்நாட்டில் வரும் 4ந் தேதி அதிகனமழை பெய்ய இருப்பதால் சென்னை வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்,தெற்கு வங்ககடலின் மத்திய கிழக்கு மற்றும் பூமத்திய ரேகை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதியில் நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 48 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று இலங்கை மற்றும் தமிழக கடற்கரை நோக்கி நகரக் கூடும். இதன் காரணமாக இன்று தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

நாளை தமிழகம் மற்றும் புதுவை காரைக்கால் பகுதிகளில் அனேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும். தஞ்சாவூர் ,திருவாரூர்,புதுக்கோட்டை ,அரியலூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம் ,செங்கல்பட்டு மாவட்டங்கள் மற்றும் புதுவை காரைக்கால் பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.

4ம் தேதி கடலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம் மாவட்டங்கள் மற்றும் புதுவை பகுதிகளில் ஒரு சில இடங்களில் கன முதல் அதிகனமழையும், தஞ்சாவூர், திருவாரூர் ,நாகப்பட்டினம் ,மயிலாடுதுறை ,செங்கல்பட்டு ,காஞ்சிபுரம் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் கன முதல் மிக கன மழையும் ,சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை ,திருப்பத்தூர், திருச்சி ,பெரம்பலூர் ,அரியலூர் ,வேலூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கன மழையும் பெய்ய வாய்ப்புள்ளது.

5ம் தேதி திருவள்ளூர், காஞ்சிபுரம் ,ராணிப்பேட்டை ,செங்கல்பட்டு மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கன முதல் மிக கனமழையும் ,சென்னை ,வேலூர், திருப்பத்தூர் ,திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் மற்றும் புதுவை பகுதிகளில் ஒரு சில இடங்களில் கன மழையும் பெய்ய வாய்ப்புள்ளது. 6ஆம் தேதி தமிழக உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னையை பொருத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 32 குறைந்தபட்ச வெப்பநிலை 22 டிகிரி செல்சியஸ் ஒட்டியிருக்கும்.

 4ம் தேதி மத்திய மேற்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய தென் மேற்கு வங்க கடல் பகுதிகள் , வட தமிழகம் மற்றும் ஆந்திர கடலோரப் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் , இடையிடையே  65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.இதனால் மீனவர்கள் பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள், இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Tags : Tamil Nadu , Heavy Rain, Orange Alert, Warning, Meteorological Center
× RELATED தமிழ்நாடு, புதுச்சேரியில் நாளை...