விருத்தாசலம்: கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் சுமார் 2 ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த பிரசித்திபெற்ற விருத்தகிரீஸ்வரர் கோயில் 20 வருடங்களுக்கு பிறகு புனரமைக்கப்பட்டு கடந்த மாதம் 6ம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற்றது. அப்போது கோயிலில் ஐந்து கோபுரங்களிலும் உள்ள விமான கலசங்கள் புதுப்பிக்கப்பட்டத்துடன், மூலவர் சன்னதி கோபுரத்தில் ஒரு கலசமும், வடபுறம் உள்ள விருத்தாம்பிகை அப்பாள் சன்னதியில் 3 கலசங்களும் என நான்கு கலசங்களிலும் தலா 95 கிராம் தங்க முலாம் பூசப்பட்டு பொருத்தப்பட்டது. நேற்று அதிகாலை 5 மணியளவில் கோயிலை சுற்றி உள்ள வீதிகளில் நடைபயிற்சி செல்பவர்கள், கோயில் கலசங்கள் அப்புறப்படுத்தப்பட்டு இருப்பதை பார்த்து, காவலர்களிடம் கூறியுள்ளனர். இதையடுத்து கோயில் ஊழியர்கள் வந்து மூன்று கலசங்கள் திருடப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். தகவலறிந்து கடலூர் மாவட்ட எஸ்பி சக்தி கணேசன் மற்றும் போலீசார் வந்து விசாரணை நடத்தினர். அங்குள்ள 32 கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர்.