மேல்மலையனூர்: விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூரில் உள்ள பிரசித்தி பெற்ற அங்காள பரமேஸ்வரி அம்மன் ஆலயத்தில் வருடம் தோறும் நடைபெறும் மாசி பெருவிழா இன்று இரவு ஒன்பது மணிக்கு மேல் மகாசிவராத்திரி தினத்தில் கொடியேற்றத்துடன் துவங்குகிறது. தொடர்ந்து நடைபெறும் திருவிழாவில் நாளை காலை 9 மணிக்கு மயானக்கொள்ளையும் சனிக்கிழமை மாலை 3 மணிக்கு தீமிதி விழாவும் 7ம் தேதி திங்கள்கிழமை மாலை 3 மணிக்கு திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்வும் தொடர்ந்து 13-ம் தேதி காப்பு களைதல் நிகழ்வுடன் திருவிழா முடிவுறவுள்ளது. 13 நாட்கள இந்த விழா நடக்கிறது.
விழாவில் தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்களிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்ள உள்ளதால் அவர்களுககு தேவையான அடிப்படை வசதி மற்றும் பாதுகாப்பு வசதியினை ஏற்படுத்த மாவட்ட ஆட்சியர் மோகன் தலைமையில் முன்னேற்பாடுகள் குறித்து ஆலோசனை கூட்டம் நடை பெற்றது. இதில் கலந்து கொண்ட மாவட்ட கண்காணிப்பாளர் ஸ்ரீநாதா மற்றும் மருத்துவத் துறை, போக்குவரத்து துறை, பொதுப்பணித்துறை, வருவாய் துறை, ஊராட்சித் துறை உணவு பாதுகாப்பு துறை உள்ளிட்ட துறை சார்ந்த அதிகாரிகள் கலந்துகொண்டு பக்தர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் ஏற்படுத்தி தர ஆலோசனை வழங்கப்பட்டது.
திருக்கோயில் சார்பாக தற்காலிக பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட்டு அதன் மூலம் மேல்மலையனூர் சுற்றியும் போக்குவரத்து நெரிசலை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மாசி பெருவிழாவிற்காக திரு கோவில் முழுவதும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு மேல்மலையனூர் கிராமமே விழாக்கோலம் பூண்டு காட்சியளிக்கிறது. விழா ஏற்பாடுகளை திருக்கோயில் உதவி ஆணையர் ராமு, மேலாளர் மணி உள்ளிட்ட அலுவலர்களும், அறங்காவலர் குழு தலைவர் வடிவேல் பூசாரி தலைமையிலான அறங்காவலர்களும் செய்து வருகின்றனர்.