×

திருவள்ளூர் அருகே ஒப்பந்ததாரர் வீட்டில் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக கூறி 200 சவரன் நகை கொள்ளை..!!!

திருவள்ளூர்: திருவள்ளூர் அருகே ஒப்பந்ததாரர் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் போல் நடித்து 200 சவரன் நகைகளை கொள்ளையடித்து சென்ற கும்பலை பற்றி போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். திருவள்ளூர் அடுத்த வெள்ளக்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் பாலமுருகன். இவர் நெடுஞ்சாலை துறை ஒப்பந்த பணியாளராக கான்ட்ராக் எடுத்து பணிபுரிந்து வருகிறார். கடந்த 5 ஆண்டுகளாக அதிமுக ஆட்சிக்காலத்தில் அப்பணிகளை மேற்கொண்டு வந்துள்ளார். இந்நிலையில், இன்று அதிகாலை 5.30 மணி அளவில் பாலமுருகன் வீட்டிற்கு யுனோவா காரில் பெண் உட்பட 7 பேர் வந்துள்ளனர்.

அவர்கள் போலீஸ் சீருடை அணிந்திருந்த நிலையில், பாலமுருகனிடம், நாங்கள் வருமான வரித்துறை அதிகாரிகள்; வீட்டில் சோதனையிட வேண்டும் என்று போலி அடையாள அட்டைகளை காட்டி வீட்டிற்குள் நுழைந்துள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த பாலமுருகனும் அவரது குடும்பத்தினரும் என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்துள்ளனர். பின்பு  பாலமுருகனிடம், வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக உங்கள் மீது புகார் வந்துள்ளது என கூறி, பாலமுருகன் மற்றும் அவரது மனைவியிடம் விசாரணையை மேற்கொண்டுள்ளனர். அந்த விசாரணையின் போது பல்வேறு ஆவணங்களை பாலமுருகன் அவர்களிடம் சமர்ப்பித்துள்ளார்.

இருப்பினும் அந்த கும்பல் பாலமுருகனிடம், வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக கூறி, பீரோவில் இருந்த 200 சவரன் நகை மற்றும் ரூ. 2 லட்சம் பணத்தை பறிமுதல் செய்துள்ளனர். பின்னர், அந்த கும்பல் நகை,பணத்துக்குரிய ஆவணங்களை வருமான வரித்துறை அலுவலகத்தில் சமர்ப்பித்து நகை,பணத்தை திரும்ப பெற்றுக்கொள்ளுமாறு கூறி அங்கிருந்து தப்பியுள்ளனர். இதுகுறித்து பாலமுருகன் செவ்வாப்பேட்டையில் உள்ள வருமான வரித்துறை மற்றும் போலீசாரிடம் விசாரித்தபோது சோதனையில் ஈடுபட்டது போலி கும்பல் என்றும், அவர்கள் வருமான வரித்துறை அதிகாரிகள் போல் நடித்து நகை,பணத்தை அள்ளிச் சென்று இருப்பதும் தெரியவந்தது. இது தொடர்பாக ஆவடி துணை ஆணையர் மகேஷ்குமார் மற்றும் பூந்தமல்லி உதவி ஆணையர் முத்துவேல் பாண்டி சம்பவ இடத்திற்கு சென்று விசாரணையை மேற்கொண்டனர். 


Tags : Tiruvallur , Tiruvallur, contractor, income, property, 200 razors, robbery
× RELATED திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அருகே...