வத்திராயிருப்பு : மாசி பிரதோஷத்தையொட்டி சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் சாமி தரிசனம் செய்ய ஏராளமான பக்தர்கள் குவிந்தனர்.மதுரை மாவட்டம், சாப்டூர் அருகே சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில் உள்ளது. இங்கு மாசி பிரதோஷம், மகா சிவராத்திரி, அமாவாசையையொட்டி நேற்று முதல் மார்ச் 3ம் தேதி வரை காலை 7 மணி முதல் 11 மணி வரை மட்டும் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவர் என அறிவிக்கப்பட்டது.
அதன்படி நேற்று அதிகாலை 3 மணிக்கே கோயிலுக்கு செல்ல சென்னை, நெல்லை, கோவை, திருச்சி, சேலம், மதுரை, விருதுநகர் என பல ஊர்களிலிருந்து பக்தர்கள் தாணிப்பாறை வனத்துறை கேட் பகுதியில் குவிந்தனர். காலை 6.30 மணிக்கு வனத்துறை கேட் திறந்ததும் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய சென்றனர். மாலையில் பிரதோஷத்தையொட்டி சுந்தரகமகாலிங்கம் சாமிக்கு 18 வகையான அபிஷேகங்கள் நடத்தப்பட்டது.
பின்னர் சாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்து, பூஜைகள் செய்தனர். ஏற்பாடுகளை கோயில் பரம்பரை அறங்காவலர் ராஜா, செயல்அலுவலர் விஸ்வநாத் செய்திருந்தனர். இன்று இரவு சிவராத்திரியையொட்டி சுந்தரமகாலிங்கம் கோயிலில் இரவு 8 மணி, நள்ளிரவு 12 மணி, அதிகாலை 3 மணி, 6 மணி ஆகிய 4 கால சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது.