சென்னை:செங்கல்பட்டு மாவட்டம் ஊரப்பாக்கம் ஊராட்சி நேதாஜி நகர், முதல் தெருவை சேர்ந்தவர் ஷாஜகான் (49). இவர், அப்பகுதியில் எலக்ட்ரிக்கல் கடை வைத்து நடத்தி வருகிறார். இவருடைய மகள் ஹாஜிதாபானு உக்ரைனில் உள்ள கார்கிவ்வில் நேஷனல் மெடிக்கல் யுனிவர்சிட்டியில் 3ம் ஆண்டு மெடிக்கல் படித்து வருகிறார். இந்நிலையில், உக்ரைன் நாட்டு மீது ரஷ்யா கடந்த சில தினங்களாக போர் நடத்தி வருகிறது. இதில், தனது மகளையும், அங்கு படித்து வரும் 5000 மாணவ, மாணவிகளையும் மீட்டுத்தர பிரதமர் நரேந்திரமோடி மற்றும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி மாணவியின் பெற்றோர் கதறி அழுதனர்.
இதுகுறித்து மாணவியின் பெற்றோர் கூறுகையில், ‘எங்களது மகள் ஷாஜிதாபாணு நேற்று முன்தினம் இரவு எங்களுக்கு வீடியோ பதிவு ஒன்றை அனுப்பி வைத்துள்ளார். தற்போது 5000 மாணவ, மாணவிகள் இங்கு உள்ளனர். நாங்கள் இந்தியாவுக்கு ரஷ்யா வழியாக வர 40 கிலோ மீட்டர்தான். ஆனால், ரஷியா வழியாக செல்வதற்கு உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி அனுமதி கொடுக்க மறுக்கிறார். எனவே, ரஷ்யா வழியாக நாங்கள் கடந்து வர பிரதமர் நரேந்திரமோடி மற்றும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் ரஷ்யா, உக்ரைன் நாட்டு அதிபரிடம் பேசி ஏற்பாடு செய்ய வேண்டும் என்றனர். மாணவி ஷாஜிதாபானு பெற்றோரிடம் கூறியதாவது: உக்ரைன் கார்கிவ் பகுதியில் ஏராளமானோர் குண்டு மழைக்கு பயந்து சுரங்கங்களில் தஞ்சம் அடைந்துள்ளனர். மேலும், -2 டிகிரி பனியால் உறைந்து கிடக்கிறோம். பேர்வை, உணவு, தண்ணீர் இல்லை என்றார்.