ஸ்ரீபெரும்புதூர்: ஸ்ரீபெரும்புதூர் அடுத்த மாம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் பிரபு (37) ஸ்ரீபெரும்புதூர், மாம்பாக்கம், சுங்குவார்சத்திரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தில் உள்ள தனியார் தொழிற்சாலை நிர்வாகிகளை மிரட்டி பணம் வசூலித்து வந்துள்ளார். இவர் பிரபல ரவுடியான படப்பை குணாவின் கூட்டாளி. இந்நிலையில் கடந்த மாதம் என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட் ஏ.டி.எஸ்.பி. வெள்ளைதுரை தலைமையிலான தனிப்பிரிவு போலீஸ் பிரபுவை கைது செய்தனர். மேலும் அவனிடம் இருந்து விலை உயர்ந்த நான்கு சொகுசு கார்களை பறிமுதல் செய்தனர். இதையடுத்து பிரபுவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்நிலையில் சிறையில் அடைக்கப்பட்ட ஓரிரு நாட்களில், 15 நாட்கள் ஸ்ரீபெரும்புதூர் காவல் நிலையத்தில் கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையுடன் ஜாமீன் வழங்கபட்டது. ஜாமீனில் வெளியே வந்த பிரபு, ஸ்ரீபெரும்புதூர் காவல் நிலையத்தில் கையெழுத்திடாமல், தலைமறைவாகி உள்ளான்.