பொன்னை: பொன்னை அருகே பள்ளி மாணவர்கள் சென்று வரும் நேரத்தில் அரசு பேருந்துகள் செல்ல கால அட்டவணை மாற்ற வேண்டுமென பள்ளி மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த பொன்னை பகுதியில் அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப் பள்ளிகள் உள்ளன. பொன்னை பகுதியை சுற்றி ஆவல்ரங்கபள்ளி, கோடவாரிபள்ளி, பாலேகுப்பம், என்.பி.என். பாளையம், முத்தியால்பள்ளி மற்றும் பொன்னைபுதூர் உள்ளிட்ட சுமார் 25-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன.
இந்த கிராமங்களிலிருந்து பொன்னை அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இந்நிலையில் பொன்னை பகுதியில் இருந்து ஆவலரங்கபள்ளி பகுதிக்கும் பொன்னைபுதூர் மற்றும் எம்பளாளூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு தமிழ்நாடு அரசு பேருந்துகள் தினமும் இரண்டு முறை சென்று வருகின்றன. இதில் பொன்னையிலிருந்து ஆவல்ரங்கபள்ளி செல்லும் அரசு பேருந்துகள் காலை நேரத்தில் 20A 7.30 மணிக்கும் மற்றும் 12- 10.30 மணிக்கும் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.
இதில் பள்ளி மாணவர்கள் செல்லமுடியாத நேரத்திற்கு அரசு பேருந்துகள் இயக்கப்படுவதால் ஆவலரங்கபள்ளி, கோடவாரிபள்ளி, பாலேகுப்பம் உள்ளிட்ட கிராமங்களில் இருந்து வரும் பள்ளி மாணவர்கள் பேருந்துகளில் செல்ல முடியாமல் சுமார் ஐந்து கிலோமீட்டர் தொலைவிற்கு நடந்தே செல்லும் நிலை ஏற்படுகின்றது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் அரசு பேருந்துகள் செல்லும் கால அட்டவணையை மாற்றி கிராமங்களிலிருந்து வரும் பள்ளி மாணவர்கள் சென்று வர வழிவகை செய்ய வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.