×

மஞ்சூர் பகுதிகளில் காட்டு மாடுகள் நடமாட்டம் அதிகரிப்பு: தோட்டத் தொழிலாளர்கள் அவதி

மஞ்சூர்:  மஞ்சூர் அருகே மெரிலேண்டு, மைனலாமட்டம், பெங்கால்மட்டம், கிட்டட்டிமட்டம், தேனாடு, கோத்திபென், சாம்ராஜ் எஸ்டேட் மற்றும் ராக்லேண்டு உள்ளிட்ட கிராமங்கள் உள்ளது. நுாற்றுக்கணக்கான குடும்பங்கள் வசித்து வரும் இந்த கிராமங்களை சுற்றிலும் தேயிலை தோட்டங்களுடன் அடர்ந்த காடுகள் சூழ்ந்துள்ளது. இந்நிலையில் சமீபகாலமாக இப்பகுதிகளில் வன விலங்குகளின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. குறிப்பாக காட்டு மாடுகள் அதிகளவில் நடமாடி வருகின்றன. மேற்படி கிராமங்களில் ஏராளமான விவசாயிகள் உருளைகிழங்கு, கேரட், பீட்ரூட், பட்டாணி, அவரை, பீன்ஸ், முட்டைகோஸ் உள்ளிட்ட பல வகையிலான மலைகாய்கறிகளை பயிரிட்டு விவசாயத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இந்நிலையில் விளை நிலங்களில் காட்டு மாடுகள் கூட்டம், கூட்டமாக புகுந்து பயிர்களை சூறையடுவதுடன் தோட்டங்களையும் கால்களால் மிதித்து நாசம் செய்து வருகின்றன. இவகைளின் தொல்லையால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் பலர் மலைகாய்கறி விவசாயம் மேற்கொள்வதை விட்டு விட்டனர். மேலும் இப்பகுதிகளில் உள்ள தேயிலை தோட்டங்களில் கூட்டமாக மேய்ச்சலில் ஈடுபடும் காட்டு மாடுளால் தேயிலை தோட்டங்களுக்கு இலை பறிக்க செல்லும் தொழிலாளர்களும் பணிக்கு செல்ல தயக்கம் காட்டி வருகின்றனர். நேற்று முன் தினம் மஞ்சூர் அருகே தாய்சோலா பகுதியில் உள்ள தேயிலை தோட்டத்தில் தொழிலாளர் சிலர் தேயிலை பறித்து கொண்டிருந்தனர்.

அப்போது 10கும் மேற்பட்ட காட்டு மாடுகள் கூட்டமாக தேயிலை தோட்டத்திற் குள் புகுந்துள்ளது. இதை கண்ட பெண்கள் இலை சேகரித்த பைகளை தோட்டத்திலேயே போட்டு விட்டு அலறி அடித்து கொண்டு ஓடியுள்ளனர். இதை தொடர்ந்து சுமார் 1மணி நேர மேய்ச்சலுக்கு பிறகே காட்டுமாடுகள் அங்கிருந்து சென்றுள்ளது. மஞ்சூர் காட்டு மாடுகளின் தொல்லை நாளுக்குநாள் அதிகரித்து வருவதால் இவற்றின் நடமாட்டத்தை முற்றிலுமாக கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என தோட்டத் தொழிலாளர்கள் வலியுறுத்தியுள்ளார்கள்.

Tags : Manzoor , Manzoor area, wild cows, nomadic
× RELATED ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த...