திருப்பூர்: திருப்பூர் கல்லூரி சாலை கொங்கணகிரி பகுதியை சேர்ந்தவர் மணி (55). சுமைப்பணி தொழிலாளியான இவர், மக்கள் நீதி மய்யம் கட்சியில் உறுப்பினராக இருந்து வந்தார். இந்நிலையில், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலின் போது திருப்பூர் மாநகராட்சி 36வது வார்டில் மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் போட்டியிட்டார். அப்போது தேர்தல் செலவுக்காக அக்கம் பக்கத்தினரிடம் ரூ.50 ஆயிரம் வரை கடன் வாங்கி உள்ளார். அந்த பணத்தை வைத்து தேர்தல் செலவு செய்தார். தேர்தல் முடிவு வெளியான போது அவர் 44 ஓட்டுகள் மட்டுமே வாங்கியிருந்தார். இதனால், அவர் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானார்.
நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் திடீரென மணி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவல் அறிந்ததும் திருப்பூர் வடக்கு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்கு பதிவு செய்த திருப்பூர் வடக்கு போலீசார், தேர்தலில் தோல்வி அடைந்ததால் மணி தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது கடன் சுமை காரணமா? என விசாரணை நடத்தி வருகின்றனர்.