×

இஷான் கிஷன் பேட்டிங்கை பார்க்க மகிழ்ச்சியாக இருந்தது; கேப்டன் ரோகித்சர்மா பேட்டி

லக்னோ: இந்தியா-இலங்கை அணிகள் இடையே 3 போட்டிகள் கொண்ட டி.20 தொடரில் முதல் போட்டி லக்னோவில் நேற்று நடந்தது. டாஸ் வென்ற இலங்கை பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த இந்தியா 20 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 199 ரன் குவித்தது. அதிகபட்சமாக இஷான் கிஷன் 56 பந்தில் 10 பவுண்டரி 3 சிக்சருடன் 89 ரன் விளாசினார். கேப்டன் ரோகித்சர்மா 44 ரன்னில் (2 பவுண்டரி, ஒரு சிக்சர்) அவுட் ஆனார். ஆட்டம் இழக்காமல் ஸ்ரேயாஸ் அய்யர் 57 (28 பந்து, 5 பவுண்டரி, 2 சிக்சர்), ஜடேஜா 3 ரன் எடுத்தனர். பின்னர் களம் இறங்கிய இலங்கை 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 137 ரன்களே எடுத்தது. இதனால் இந்தியா 62 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இலங்கை அணியில் அதிகபட்சமாக சரித் அசலங்கா நாட்அவுட்டாக 53 (47 பந்து), சமீரா 24, கருணாரத்னே 21 ரன் எடுத்தனர். இந்திய பந்துவீச்சில் புவனேஸ்வர்குமார், வெங்கடேஷ் அய்யர் தலா 2, ஜடேஜா, சாஹல் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். இஷான்கிஷன் ஆட்டநாயகன் விருதுபெற்றார். இந்த வெற்றி மூலம் 1-0 என இந்தியா முன்னிலை வகிக்க 2வது போட்டி நாளை தர்மசாலாவில் நடக்கிறது. வெற்றிக்கு பின் இந்திய அணி கேப்டன் ரோகித்சர்மா அளித்த பேட்டி: இஷானின் மனநிலையும் திறமையும் எனக்குத் தெரியும், இன்று அவர் பேட்டிங் செய்வதை மறுமுனையில் இருந்து பார்க்க மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. அவர் இன்னிங்சை கட்டமைத்த விதம் மிகவும் நன்றாக இருந்தது. அது அவருக்கு பொதுவாக சவாலாக இருக்கும். ஜடேஜா திரும்பியதில் மிகுந்த மகிழ்ச்சி. நாங்கள் அவரிடமிருந்து அதிகமானவற்றை விரும்புகிறோம். அதனால்தான் அவரை அதிகமாக பேட் செய்யும் நோக்கத்தில் முன்னதாக அனுப்பினோம். வரவிருக்கும் கேம்களில் நீங்கள் அதைப் பார்க்கலாம். அவர் மிகவும் மேம்பட்ட பேட்டர். எனவே அவரை முன்னோக்கி ஊக்குவிக்க முடியுமா என்று முயற்சிப்போம்.

அவர் டெஸ்ட்டில் நல்ல பார்மில் உள்ளார். அதை வரையறுக்கப்பட்ட ஓவர்களில் பயன்படுத்த விரும்புகிறோம். பெரிய மைதானங்களில் விளையாடுவது எனக்கு மிகவும் பிடிக்கும். ஏனென்றால் அங்குதான் நீங்கள் ஒரு பேட்டராக சோதிக்கப்படுகிறீர்கள். எதிர்பார்க்காத சில கேட்சுகளை நாங்கள் கைவிடுகிறோம். எங்கள் பீல்டிங் பயிற்சியாளருக்கு சில வேலைகள் உள்ளன என்று நினைக்கிறேன். ஆஸ்திரேலியாவில் (டி.20 உலக கோப்பை தொடர்) சிறந்த பீல்டிங் அணியாக இருக்க விரும்புகிறோம், என்றார். இலங்கை கேப்டன் ஷனகா கூறுகையில், நாங்கள் பேட்டிங், பந்துவீச்சு, பீல்டிங் என எதிலும் சிறப்பாக செயல்படவில்லை. ஆனால் இந்திய வீரர்கள் அழகாக பேட்டிங் செய்தனர். நாங்கள் இன்னும் நன்றாக பந்துவீசி இருக்கலாம். தீஷனா, ஹசரங்கா என 2 முன்னணி சுழற்பந்துவீச்சாளர்கள் இல்லாமல் இருக்கிறோம். அது எங்களுக்கு பாதிப்பு’’ என்றார்.

Tags : Ishant Kishan ,Rohit Sharma , Ishant Kishan was happy to see the batting; Interview with Captain Rohit Sharma
× RELATED ஐபிஎல் தொடரில் அதிக முறை ‘டக் அவுட்’...