காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் வட்டம் ஊத்துக்காடு கிராமத்தில் பொதுப்பணி துறைக்கு சொந்தமான ஏரி உள்ளது. இதன்மூலம் 1800 ஏக்கர் பரப்பளவில் உள்ள நிலத்தில், விவசாயிகள் விவசாய தொழில் செய்கின்றனர்.
கடந்த 2019 முதல் 5 ஆண்டுகளுக்கு மீன்வளத்துறை சார்பில் வேலையில்லா பட்டதாரிகள் ஒருங்கிணைந்த கூட்டுறவு சங்கங்களை உருவாக்கி, அதன் மூலம் குத்தகைக்கு எடுத்து மீன் வளர்ப்பில் ஈடுபட அரசு தீர்மானித்தது.
அதன்படி, மாவட்ட கலெக்டரை தலைவராக கொண்ட இக்குழுவின் பரிந்துரையை ஏற்று, ஊத்துக்காடு ஏரி வெங்கடேசன் என்பவருக்கு வழங்கப்பட்டது. கடந்த 2 பருவ மழைகளும் ஏரியில் தண்ணீர் நிரம்பியதால் விவசாயிகள் மகிழ்ச்சியுடன் பயிர் செய்தனர். ஆனால், ஏரியில் மீன்பிடித்ததாக கூறி, நீரை வெளியேற்றுவதும் மதகு கரைகளை சேதப்படுத்தி வருவதாக கூறப்படுகிறது. இதையொட்டி, கிராம மக்கள், ஊராட்சி மன்ற தலைவர் சாவித்திரி மணிகண்டன் தலைமையில் காஞ்சிபுரம் தாலுகா அலுவலகத்தில் உள்ள பொதுப்பணித் துறை அலுவலக நுழைவாயில் முன்பு நேற்று திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில் துணைத் தலைவர் வனஜா லட்சுமணன் உள்பட 9 வார்டு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். அவர்களிடம் இளநிலை பொறியாளர் மார்க்கண்டேயன் சமரச பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, கிராம மக்கள் பலர் வேலை இல்லாதபோது முறைகேடாக இந்த குத்தகை பெறப்பட்டதாகும். பெரிய படகுகளை கொண்டு ஏரிக்கரைகளை சேதப்படுத்தி வருவதும், மீன் வளர்ப்புக்கான கழிவுகளை ஏரியில் கொட்டி அசுத்தம் ஏற்படுத்துகின்றனர். இதை மாவட்ட நிர்வாகத்திடமும் , பொதுப்பணித் துறை அலுவலர்களுக்கும் ஏரி மீண்டும் பொதுப்பணித்துறை வசம் ஒப்படைக்க வேண்டும் என பொதுமக்கள் கூறினர். அதற்கு, உரிய நடவடிக்கை எடுப்படுவதாக உறுதியளித்தார். இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.