லிமா: பெரு நாட்டின் தலைநகர் அருகே 1200 ஆண்டுகளுக்கு முன்பு நரபலி கொடுக்கப்பட்ட 8 குழந்தைகள் உட்பட 20 பேரின் சடலங்கள், ‘மம்மி’களாக கிடைத்துள்ளன. பெரு நாட்டின் தலைநகரான லிமாவின் கிழக்கு பகுதியில் உள்ள கஜமார்கியுல்லாவில், சான் மார்கோஸ் பல்கலைக் கழக ஆய்வாளர்கள் குழுவினரால் கடந்தாண்டு நவம்பரில் ஒரு கல்லறையின் கீழ் பழங்காலத்தில் பதப்படுத்தப்பட்ட நிலையிலான 20 சடலங்கள் (மம்மி) கண்டறியப்பட்டது. இவற்றில் சடலங்கள் சிறுவர்களுடையது. மற்றவை நடுத்தர, மூத்த வயது உடையவர்களின் சடலங்கள்.
இது குறித்து தொல்லியல் ஆய்வாளர் பீட்டர் வான் தலேன் அளித்த பேட்டியில், `தலைமை மம்மிக்கு துணையாக பழைய சடங்குமுறைப்படி பலி கொடுக்கப்பட்ட பிற மம்மிகள் ஒவ்வொரு அடுக்காக துணியினால் சுற்றப்பட்டு, உடல் முழுவதும் கயிற்றால் கட்டி அடுக்கி வைக்கப்பட்டு இருந்தன. இவை 1,700 ஆண்டுகளுக்கு முன்பு மன்னராக இருந்த சிபான் தனது குழந்தைகள், மற்றவர்களுடன் புதைக்கப்பட்ட வடிவமைப்பை கொண்டுள்ளது. இந்த 20 மம்மிகளும் 1,200 ஆண்டுகளுக்கு முந்தையதாக இருக்கக் கூடும். சடங்குமுறைப்படி, பலி கொடுத்ததற்கான அடையாளங்கள் சில மம்மிகளின் உடல் பாகங்களில் தெரிகிறது,’ என்று கூறினார்.