சென்னை: மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் 50 லட்சமாவது பயனாளிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று நேரில் மருந்து பெட்டகம் வழங்கினார். புதிய 188 அவசரகால ஊர்திகளின் சேவையையும் தொடங்கி வைத்தார். சித்தாலப்பாக்கம் ஊராட்சி சமூக நல கூட வளாகத்தில் இதற்கான விழா நடந்தது. இதுகுறித்து, தமிழக அரசு வெளியிட்ட அறிக்கை:
கிருஷ்ணகிரி மாவட்டம், சாமனப்பள்ளி கிராமத்தில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 5ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் ரூ.258 கோடி செலவில் மக்களைத் தேடி மருத்துவத் திட்டத்தை தொடங்கி வைத்து, முதல் பயனாளியின் இல்லத்திற்கு நேரில் சென்று மருந்து பெட்டகத்தை வழங்கினார். இதில் 45 வயதும் அதற்கு மேற்பட்டும் உள்ளவர்கள், உயர் ரத்த அழுத்இயன்முறை மருத்துவ சேவைகள், சிறுநீரக நோயாளிகளை பராமரித்தல், அத்தியாவசிய மருத்துவ சேவைகளுக்கு பரிந்துரைத்தல், குழந்தைகளின் பிறவி குறைபாடுகளை கண்டறிந்து தெரிவித்தல், பெண்களை கருப்பைவாய் மற்றும் மார்பக புற்றுநோய் கண்டறிவதற்காக ஆய்வுக்கு பரிந்துரைத்தல் போன்ற ஒரு குடும்பத்திற்கு தேவையான அனைத்து சுகாதார சேவைகளையும் வழங்கி கண்காணிக்க இத்திட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து புதிதாக 188 அவசரகால வாகனங்களின் சேவையை முதல்வர் மு.க. ஸ்டாலின் நேற்று கொடியசைத்து தொடங்கி வைத்தார். மக்களை தேடி மருத்துவம், “இன்னுயிர் காப்போம் - நம்மைக் காக்கும் 48” திட்டங்களின் பயனாளிகளுடன், மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் தினந்தோறும் சுய டாயலிசிஸ் சிகிச்சை செய்து கொள்வதற்கான திரவப்பைகளை பெற்றுவரும் சிறுநீரக செயல்பாடு இழந்த கடலூர் மாவட்டம், நங்குடி கிராமத்தைச் சேர்ந்த பள்ளி மாணவன் செல்வன் பவினுடன் முதல்வர் கலந்துரையாடினார். மேலும், விபத்தினால் கால்களை இழந்த சங்கீதா, முகமது ஷேக் அப்துல்லா ஆகியோருக்கு முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் நவீன செயற்கை கால்களை வழங்கினார்.மேலும் இன்னுயிர் காப்போம் - நம்மைக் காக்கும் 48 திட்ட பயனாளிகளுடன் கலந்துரையாடினார்.
அப்போது கோவையில் இரண்டு சக்கர வாகன விபத்தில் சிக்கி படுகாயமுற்று பல மணிநேரம் அதிதீவிர அறுவை சிகிச்சை அளிக்கப்பட்டு, குணமடைந்த மோகன்குமார் என்ற கல்லூரி மாணவனிடம் சிகிச்சை விவரங்கள் குறித்து அக்கறையுடன் கேட்டறிந்தார். இன்னுயிர் காப்போம் - நம்மைக் காக்கும் 48 திட்டத்தின் மூலமாக, இந்த மருத்துவ உதவிகளை வழங்கியதற்காக முதல்வருக்கு மாணவன் நன்றி தெரிவித்தார். மக்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்வது எங்களது கடமை என்று முதல்வர் கூறினார்.
நிகழ்ச்சியில் அமைச்சர்கள் தா.மோ.அன்பரசன், மா.சுப்பிரமணியன், நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன், சட்டமன்ற உறுப்பினர்கள் எஸ்.அரவிந்த் ரமேஷ், எஸ்.ஆர்.ராஜா, இ.கருணாநிதி, எஸ்.எஸ்.பாலாஜி, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சிறப்புப் பணி அலுவலர் செந்தில் குமார், தேசிய நலவாழ்வுக் குழும இயக்குநர் தாரேஸ் அகமது, தமிழ்நாடு சுகாதாரத் திட்ட இயக்குநர் எஸ்.உமா, செங்கல்பட்டு மாவட்ட ஆட்சித் தலைவர் ராகுல்நாத் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.