சித்தூர் : சித்தூரில் 11வது சம்பள உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கிராம வருவாய் உதவியாளர்கள் நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சித்தூரில் உள்ள மண்டல வருவாய் துறை அலுவலகம் முன்பு கிராம வருவாய் உதவியாளர்கள் சங்கம் சார்பில் 15ம் நாளான நேற்று கோரிக்கைகளை வலியுறுத்தி முட்டி போட்டு நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.இதில், சங்க மாவட்ட தலைவர் கோதண்டன் தலைமை தாங்கினார். பின்னர் அவர் பேசியதாவது:
ஆந்திர மாநில அரசு 11வது சம்பள உயர்வு அறிவித்தது. ஆனால் கிராம வருவாய்த்துறை உதவியாளர்களுக்கு 11வது சம்பள உயர்வு அறிவிப்பு இல்லை. இது மிகவும் கண்டிக்கத்தக்கது. நாங்கள் 15 ஆண்டுகளுக்கும் மேலாக கிராம வருவாய்த்துறை உதவியாளர்களாக பணிபுரிந்து வருகிறோம். ஏராளமான கிராமங்களில் நகரங்களில் பாகப்பிரிவினை செய்யும் போது அந்த நிலங்களை அளந்து மாநில அரசுக்கு வருவாய் ஈட்டி தருகிறோம். ஆனால் எங்களுக்கு மட்டும் மாநில அரசு சம்பள உயர்வு அறிவிப்பு வெளியிடவில்லை. இது மிகவும் கண்டிக்கத்தக்கது. தற்போது வெறும் ₹10 ஆயிரம் சம்பளமாக வழங்கப்பட்டு வருகிறது. இதனால் எங்கள் குடும்பங்கள் பெரும் அவதிப்பட்டு வருகிறது. மேலும் எங்களின் பிள்ளைகள் படிக்க வசதி இல்லாமல் கூலி வேலை செய்து படிக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.
அதுமட்டுமல்லாமல் டிஏ எனப்படும் போக்குவரத்து பில் ஆறு மாதங்களாக வழங்கப்படவில்லை நாங்கள் ஒவ்வொரு கிராமமாக நிலங்களை அளக்க ஆட்டோக்களிலும் பஸ்களிலும் சென்று வருகிறோம் இதற்காக எங்களுக்கு மாதம் ரூபாய் 1000 முதல் 2000 வரை செலவு ஏற்படுகிறது. மாநில அரசு 350 ரூபாய் போக்குவரத்தில் வழங்கப்பட்டு வந்தது அதுவும் தற்போது ஆறு மாதங்களாக வழங்கப்படவில்லை இது மிகவும் கண்டிக்கத்தக்கது எனவே, எங்களுக்கு மாதம் ₹26 ஆயிரம் சம்பளம் வழங்க வேண்டும்.
அதேபோல் வீடு இல்லாத அனைவருக்கும் இலவச வீட்டு மனை பட்டா வழங்கி வீடுகள் கட்டித்தர வேண்டும். அவரவர்களின் தகுதிக்கு ஏற்ப பணி உயர்வு வழங்க வேண்டும். முதல்வர் ஜெகன்மோகன் உடனடியாக எங்கள் கோரிக்கைகளை ஏற்க வேண்டும். தற்போது தொடர்ந்து 15 நாட்களாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம் இருப்பினும் மாநில முதல்வர் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. எங்களின் கோரிக்கைகளை நிறைவேற்றும் வரை நாங்கள் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவோம். இவ்வாறு அவர் தெரிவித்தார். இதில், ஏராளமான கிராம வருவாய்த்துறை உதவியாளர்கள் முட்டிபோட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.