ஓசூர் : ஓசூர் மாநகராட்சியில் 13வது வார்டில் திமுக சார்பில் போட்டியிட்ட 23 வயதான சட்டக்கல்லூரி மாணவி வெற்றி பெற்றுள்ளார்.கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் மாநகராட்சி தேர்தலில் மொத்தமுள்ள 45 வார்டுகளில், 42 வார்டுகளில் திமுகவும், 3 வார்டுகளில் கூட்டணி கட்சியான காங்கிரசும் போட்டியிட்டன. அதில் 13வது வார்டில் போட்டியிட்ட சட்டக்கல்லூரி மாணவி யஸஷ்வினி(23), 1146 வாக்குகள் பெற்றுள்ளார்.
அவரை எதிர்த்து போட்டியிட்ட பாஜ வேட்பாளர் ரேவதி 506 வாக்குகளை பெற்றார். 640 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற யஸஷ்வினி, பெங்களூரு அல்-அமீன் சட்டக் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். இவரது கணவர் மோகன், ஓசூரில் வியாபாரம் செய்து வருகிறார். எந்தவித அரசியல் பின்புலமும் இல்லாத அவருக்கு, திமுகவில் வாய்ப்பு அளிக்கப்பட்டது. மக்களுக்கு சேவை செய்யவே தேர்தலில் போட்டியிட்டதாகவும், மக்களுடன் மக்களாக இருந்து சேவை செய்ய போவதாக யஸஷ்வினி தெரிவித்துள்ளார். வெற்றி பெற்றதையடுத்து, அவர் கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட செயலாளர் பிரகாஷ் எம்எல்ஏ, முன்னாள் எம்எல்ஏ சத்யா ஆகியோரை சந்தித்து வாழ்த்து பெற்றார்.