சென்னை: மாங்காடு நகராட்சி வார்டு கவுன்சிலர்களுக்கான வாக்கு எண்ணும் பணிகள் குன்றத்தூரில் உள்ள தனியார் கல்லூரியில் நடந்தது. மொத்தம் 27 வார்டுகளில் போட்டியிட்டு வெற்றி பெற்ற வேட்பாளர்களின் பெயர்கள் ஒவ்வொன்றாக அறிவிக்கப்பட்டன. இதில், மாங்காடு நகராட்சி 9வது வார்டில் திமுக கூட்டணியில், போட்டியிட்ட குன்றத்தூர் ஒன்றிய மதிமுக செயலாளர் முருகன், 6வது வார்டில் போட்டியிட்ட அவரது மனைவி சுமதி ஆகியோர் வெற்றி பெற்றனர். அவர்கள் வெற்றி பெற்றதற்கான சான்றிதழ்கள் தேர்தல் நடத்தும் அதிகாரிகளால் வழங்கப்பட்டது. அதேபோல் மாங்காடு நகராட்சி 12வது வார்டில் அதிமுக கூட்டணியில் போட்டியிட்ட புரட்சி பாரதம் கட்சியை சேர்ந்த ருசேந்திரகுமார், 16வது வார்டில் போட்டியிட்ட அவரது மனைவி ராணி ஆகியோர் வெற்றி பெற்றனர். மேலும், 25வது வார்டில் திமுக சார்பில் போட்டியிட்ட திமுக நகர செயலாளர் ஜபருல்லா, 27வது வார்டில் போட்டியிட்ட அவரது மனைவி யாஸ்மின் ஆகியோர் வெற்றி பெற்றனர். ஒரே நேரத்தில் 3 தம்பதிகள் வெற்றி பெற்றதையடுத்து, அவர்களது ஆதரவாளர்கள் பட்டாசு வெடித்து, இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.