×

பெரியகுளம், போடி நகராட்சிகளை இழந்தது அதிமுக சொந்த மண், தொகுதியில் ஓரங்கட்டப்பட்ட ஓபிஎஸ்: தேனியில் 6 நகராட்சிகளையும் அள்ளியது திமுக

தேனி: முன்னாள் துணை முதல்வர் ஓபிஎஸ்சின் சொந்த ஊரான பெரியகுளம், தொகுதியான போடி நகராட்சிகளில் அதிமுக தோல்வி அடைந்துள்ளது. தேனி மாவட்டத்தில் தேனி அல்லிநகரம், பெரியகுளம், போடி, கம்பம், கூடலூர், சின்னமனூர் என 6 நகராட்சிகள் உள்ளன. நேற்றைய வாக்கு எண்ணிக்கையில், இந்த 6 நகராட்சிகளிலும் திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் அபார வெற்றி பெற்றுள்ளன. குறிப்பாக அதிமுக ஒருங்கிணைப்பாளரான ஓ.பன்னீர்செல்வம் பிறந்து வளர்ந்த ஊரான பெரியகுளம் நகராட்சியில் உள்ள 30 வார்டுகளில் திமுக கூட்டணி 15 இடங்கள், அதிமுக 8 இடங்களில் வென்றுள்ளன.

சுயேச்சைகள் ஆதரவு தெரிவித்துள்ள நிலையில் திமுக இந்நகராட்சியை கைப்பற்றியுள்ளது. ஓபிஎஸ் வசிக்கும் தெற்கு அக்ரஹார வீடு 21வது வார்டில் உள்ளது. இங்கு திமுக வெற்றி பெற்றுள்ளது. 2001ம் ஆண்டு ஓ.பன்னீர்செல்வம் முதல்வராக இருந்தபோது நடந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலிலும் பெரியகுளம் நகராட்சி திமுக வசமானது. அப்போதும் அவர் வீடு உள்ள வார்டிலும் அதிமுக தோல்வியையை சந்தித்தது. 20 ஆண்டுகளுக்குப் பின்பு அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் என்ற அந்தஸ்தை பெற்ற பிறகு, ஓபிஎஸ் சந்திக்கக்கூடிய இந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பெரியகுளம் நகராட்சியை அதிமுக இழந்துள்ளது.

இதேபோல ஓபிஎஸ் கடந்த 10 ஆண்டுகளாக எம்எல்ஏவாக இருந்து வரும் போடி தொகுதியில், போடி நகராட்சியையும் திமுக கைப்பற்றி உள்ளது. தொகுதியில் அவர் குடியிருக்கும் 32வது வார்டிலும் அதிமுக தோல்வியை தழுவி உள்ளது. போடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட குச்சனூர் பேரூராட்சியில் ஒரு  வார்டில் கூட அதிமுக வெற்றி பெறவில்லை. இதேபோல அதே தொகுதிக்குட்பட்ட பழனிசெட்டிபட்டி பேரூராட்சியில் மொத்தமுள்ள 15  வார்டுகளில் திமுக 7 வார்டுகளிலும், அமமுக 6 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது. இதில் அதிமுக 2  இடங்களில் மட்டும் வெற்றி பெற்று படுதோல்வியை சந்தித்துள்ளது.

இதுமட்டுமல்லாமல் ஓபிஎஸ்சின் மனைவி ஊரான உத்தமபாளையத்திலும் பெரும்பான்மையான இடங்களில் அதிமுக தோல்வியை சந்தித்துள்ளது. அதிமுக ஒருங்கிணைப்பாளரான ஓ.பன்னீர்செல்வத்திற்கு இந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் பெரும் பின்னடைவாக உள்ளது என அரசியல் விமர்சர்கள் கூறுகின்றனர். தேனி மாவட்டத்தில் 182 ஏக்கர் அரசு நில மோசடியில் ஓபிஎஸ்சுக்கு உதவியாளராக இருந்த அன்னப்பிரகாஷ் கைதாகி உள்ளார். இவ்வழக்கு விசாரணை தீவிரமடைந்து வருகிறது.

மேலும், அதிமுக ஆட்சிக்காலத்தில் இந்நிலங்களில் சுமார் ரூ.500 கோடி அளவில் கனிம வளக்கொள்ளை நடந்ததாக வழக்கு தொடரப்பட்டுள்ளது. முதல்வராக, துணை முதல்வராக இருந்த காலங்களில், தேனி மாவட்டத்தை ஓபிஎஸ் கண்டுகொள்ளவில்லை என புகார் பரவலாக உள்ளது. அடிப்படை வசதிகளிலும் பின்தங்கிய மாவட்டமாக இருப்பதாக மக்கள் புகார் கூறி வந்தனர். இதையடுத்து உள்ளாட்சி தேர்தலில் ஓபிஎஸ்சை மட்டுமல்ல... அதிமுகவையும் தேனி மாவட்ட மக்கள் ஓரங்கட்டி உள்ளனர். முதல்வராக, துணை முதல்வராக இருந்த காலங்களில், தேனி மாவட்டத்தை ஓபிஎஸ் கண்டுகொள்ளவில்லை என புகார் பரவலாக உள்ளது.


Tags : Periyakulam ,Bodi , AIADMK loses Periyakulam, Bodi municipalities
× RELATED மகாசிவராத்திரியை முன்னிட்டு...