சென்னை: சட்டமன்ற தேர்தலின்போது கோவில்பட்டி சட்டமன்ற தொகுதி தேர்தல் பறக்கும்படை தலைவர் மாரிமுத்து தலைமையிலான குழுவினர் மார்ச் 12ம் தேதி வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அமைச்சராக இருந்த கடம்பூர் ராஜு அதிகாரிகளை பணி செய்யவிடாமல் தடுத்ததாக மாரிமுத்து அளித்த புகாரின்மீது நாலாட்டின்புதூர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி உயர் நீதிமன்றத்தில் கடம்பூர் ராஜூ மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு நீதிபதி நிர்மல்குமார் முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, மனுதாரரின் கோரிக்கை ஏற்கப்படுகிறது என்று கூறி கடம்பூர் ராஜு மீதான வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டார்.