சேந்தமங்கலம் : வார விடுமுறையையொட்டி, கொல்லிமலையில் குவிந்த சுற்றுலா பயணிகள் அருவிகளில் குளித்து குதூகலித்தனர்.நாமக்கல் மாவட்டத்தில் சிறந்த சுற்றுலாத் தலங்களில் ஒன்று கொல்லிமலை. கொரோனா நோய்த்தொற்று குறைந்துள்ளதாலும், இரண்டு நாட்கள் விடுமுறை தினம் என்பதாலும் பல்வேறு பகுதியிலிருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் கொல்லிமலைக்கு சுற்றுலா வந்திருந்தனர். அவர்கள் ஆகாய கங்கை நீர்வீழ்ச்சி மாசிலா அருவி, நம்ம அருவி ஆகியவற்றில் குளித்து மகிழ்ந்தனர்.
கோடை காலம் தொடங்கியுள்ளதால் அருவிகளில் குறைந்த அளவிலான தண்ணீரே கொட்டுகிறது. அதில், குளித்து மகிழ்ந்து அங்குள்ள அரப்பளீஸ்வரர் கோயில், எட்டுக்கை அம்மன் கோயில், பெரியசாமி கோயில்களில் சுவாமி தரிசனம் செய்தனர்.
இதையடுத்து, சீக்குப்பாறை வியூ பாயிண்ட், தாவரவியல் பூங்கா, வாசலூர் பட்டி படகு இல்லம் ஆகியவற்றிலுள்ள சுற்றுலா தலங்களை சுற்றிப் பார்த்தனர். மாலை வீடு திரும்பும்போது கொல்லிமலையில் விளையும் அன்னாசி, பலா, செவ்வாழை, கமலா ஆரஞ்சு, மிளகு உள்ளிட்ட பொருட்களை வீட்டிற்கு வாங்கிச் சென்றனர். சுற்றுலா பயணிகள் வருகை தற்போது அதிகரித்துள்ளதால் சுற்றுலா தலங்களில் உள்ள சிறு சிறு கடை வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்து உள்ளனர்.