திருவாரூர்: திருவாரூர் தியாகராஜ சுவாமி கோயிலின் ஆழித்தேரோட்ட விழாவையொட்டி மஹாத்துவஜா ரோகணம் எனும் பெரிய கொடியேற்றம் நேற்று நடைபெற்றது. திருவாரூரில் வரலாற்று சிறப்புமிக்க தியாகராஜசுவாமி கோயிலின் மூலவராக வன்மீகநாதரும், உற்சவராக தியாகராஜரும் இருந்து வரும் நிலையில் இக்கோயிலின் ஆழித்தேரானது ஆசியா கண்டத்திலேயே மிகப்பெரியதாகும். இந்த ஆழித்தேரோட்டம் அடுத்த மாதம் 15ம் தேதி நடைபெறுகிறது.
இதற்கான பந்தக்கால் முகூர்த்தம் நிகழ்ச்சி கடந்த மாதம் 18ம் தேதி நடந்தது. இந்நிலையில் ஆழித்தேர் கட்டுமான பணி கடந்த 20 நாட்களுக்கும் மேலாக நடந்து வருகிறது. ஆழித்தேரோட்ட விழாவின் ஒரு பகுதியாக மஹாத்துவஜா ரோகணம் எனும் பெரிய கொடியேற்றம் நிகழ்ச்சி நேற்று காலை நடைபெற்றது. இதனையொட்டி கோயிலின் தியாகராஜர் மற்றும் வன்மீகநாதர் சன்னதி எதிரே உள்ள உயரமான கொடிமரத்தில் சிவாச்சாரியார்கள் மூலம் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு கொடியேற்றம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.