திருவொற்றியூர்: திருவொற்றியூர் 12வது வார்டில் உள்ள மாநகராட்சி தொடக்கப் பள்ளியில் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடியில் நேற்று காலை வாக்குப்பதிவு நடைபெற்றது. அப்போது, 140வது வாக்குப்பதிவு இயந்திரத்தில் திடீரென பழுது ஏற்பட்டது. அதை சரி செய்ய முயன்றபோது, அதில் நேற்று முன்தினம் தேதியில் வாக்குகள் பதிவானதாக காண்பித்தது. இதையடுத்து அந்த இயந்திரத்தை மாற்றிவிட்டு வேறு இயந்திரம் கொண்டு வரப்பட்டது. அந்த இயந்திரத்தில் 36 வாக்குகள் பதிவு செய்யப்பட்ட நிலையில் அதுவும் பழுதானது.
இதனால், 3வது வாக்குப்பதிவு இயந்திரம் கொண்டு வரப்பட்டு, நீண்ட நேர இடைவெளிக்கு பிறகு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதனால், பொதுமக்கள் நீண்ட நேரம் காத்திருந்து திரும்பி சென்றனர். எனவே, இந்த வாக்குச்சாவடி மையத்திற்கு மறுதேர்தல் நடத்த வேண்டும் என அரசியல் கட்சியினர் வலியுறத்தி, அதிகரிகளை முற்றுகையிட்டனர். இதனையடுத்து உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் முருகபாலாஜி தலைமையில் வந்த தேர்தல் அதிகாரிகள், புதிய இயந்திரம் வைத்து கூடுதலாக 2 மணி நேரம் இரவு 9 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும் என்று அறிவித்தனர். இதனையடுத்து அரசியல் கட்சியினர் கலைந்து சென்றனர். பின்னர் தொடர்ந்து வாக்குப்பதிவு நடைபெற்றது.