சென்னை: பாஜ தனித்துப் போட்டியிடுவது தவறில்லை, தைரியமாக தனித்து போட்டியிட்டுள்ளோம் என்று பாஜ தேசிய செயற்குழு உறுப்பினரும், நடிகையுமான குஷ்பு கூறினார். சென்னை மந்தைவெளி பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் பாஜ தேசிய செயற்குழு உறுப்பினரும், நடிகையுமான குஷ்பூ தனது வாக்கை பதிவு செய்தார். பின்னர் நடிகை குஷ்பு நிருபர்களிடம் கூறுகையில், ‘ யார் நல்லது செய்வார்கள் என்பதை சிந்தித்து மக்கள் வாக்களிக்கும்போதுதான், தேர்வு செய்யப்பட்டவர்களால் உதவி செய்ய முன்வர முடியும்.
ஆனால், வாக்களிக்காமல் வீட்டிலேயே இருந்தால் நிச்சயமாக இது சாத்தியம் இல்லை. வாக்களிப்பது ஜனநாயக கடமை மட்டுமல்ல, இந்த நாட்டின் குடிமகனாக இருக்கும் ஒவ்வொருவரின் கடமை. பாஜ தனித்துப் போட்டியிடுவது தவறில்லை, தைரியமாக போட்டியிட்டுள்ளோம். பாஜவுக்கும் நோட்டாவுக்கும் போட்டி என சொல்லி சொல்லியே எங்கள் எம்எல்ஏக்கள் 4 பேர் சட்டமன்றத்துக்கு சென்று விட்டார்கள் என்பதை நினைவுப்படுத்த விரும்புகிறேன். எனவே, நோட்டாவுடன் ஒப்பிட்டு பார்ப்பதை விட தமிழகத்தில் பாஜ இல்லவே இல்லை என்று கூறி வந்தபோது நாங்கள் வெற்றி பெற்று வந்துள்ளோம். பாஜ 3வது இடமா? 2வது இடமா? என்பதை பற்றியெல்லாம் கருத்து சொல்ல முடியாது’என்றார்.