கவுகாத்தி: டெல்லி அணியுடனான ரஞ்சி கோப்பை எலைட்-பி பிரிவு லீக் போட்டியில் ஷாருக்கான் மற்றும் இந்திரஜித்தின் அதிரடி ஆட்டத்தால் தமிழக அணி முதல் இன்னிங்சில் முன்னிலை பெற்றது.கவுகாத்தியில் நடந்து வரும் இப்போட்டியில், டாஸ் வென்ற தமிழகம் பந்துவீச... டெல்லி அணி முதல் இன்னிங்சில் 452 ரன் குவித்து ஆல் அவுட்டானது (141.2 ஓவர்). யாஷ் துல் 113, லலித் யாதவ் 177, ஜான்டி சித்து 71 ரன் விளாசினர். முகமது 4 விக்கெட் கைப்பற்றினார். அடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய தமிழகம் 2ம் நாள் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 75 ரன் எடுத்திருந்தது. கவுஷிக் காந்தி 37, சாய் கிஷோர் 11 ரன்னுடன் நேற்று 3ம் நாள் ஆட்டத்தை தொடங்கினர். கிஷோர் (11) ரன் அவுட்டாக, கவுசிக் காந்தி 55, கேப்டன் விஜய் சங்கர் 5 ரன்னில் வெளியேறினர். தமிழகம் 162 ரன்னுக்கு 5 விக்கெட் இழந்து தடுமாறிய நிலையில், இந்திரஜித் - ஷாருக் கான் இணை டெல்லி பந்துவீச்சை பதம் பார்த்தது. இருவரும் 6வது விக்கெட்டுக்கு 134 ரன் சேர்த்தனர். இந்திரஜித் 117 ரன் (149 பந்து, 17 பவுண்டரி, 2 சிக்சர்) விளாசி பெவிலியன் திரும்பினார்.
அடுத்து ஷாருக் - ஜெகதீசன் இணைந்து ஸ்கோரை உயர்த்தினர். அதிரடியை தொடர்ந்த ஷாருக் கான் இரட்டை சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 194 ரன் (148 பந்து, 20 பவுண்டரி, 10 சிக்சர்) விளாசி விக்கெட்டை பறிகொடுத்தார். இந்த இணை 8வது விக்கெட்டுக்கு 178 ரன் குவித்தது குறிப்பிடத்தக்கது. ஜெகதீசன் 50 ரன் (71 பந்து, 3 பவுண்டரி, 2 சிக்சர்) எடுத்து ஆட்டமிழந்தார். சரவணகுமார், சந்தீப் வாரியர் டக் அவுட்டாகி வெளியேற, தமிழகம் 494 ரன் குவித்து ஆல் அவுட்டானது (107.5 ஓவர்). முகமது 18 ரன்னுடன் களத்தில் இருந்தார். டெல்லி தரப்பில் விகாஸ் மிஸ்ரா 6 விக்கெட் அள்ளினார்.அத்துடன் 3ம் நாள் ஆட்டம் முடிவுக்கு வர தமிழகம் 42 ரன் முன்னிலை பெற்றுள்ளது. கடைசி நாளான இன்று டெல்லி 2வது இன்னிங்சை தொடங்கி விளையாடும்.