×

நதிகள் இணைப்பு திட்டத்தை விரைவாக அமல்படுத்த வேண்டும்: டெல்லி கூட்டத்தில் தமிழக அதிகாரிகள் வலியுறுத்தல்

புதுடெல்லி: காவிரி - கோதாவரி உட்பட நதிகள் இணைப்புத் திட்டத்தை விரைந்து செயல்படுத்த வேண்டும் என டெல்லியில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் தமிழக அதிகாரிகள் வலியுறுத்தி உள்ளனர்.நாடாளுமன்றத்தில் கடந்த 1ம் தேதி 2022-23 ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டபோது, ரூ.86 ஆயிரம் கோடியில் காவிரி - கோதாவரி உள்ளிட்ட 5 நதிகள் இணைப்பு திட்டம், மாநில அரசுகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டு விரைவில் செயல்படுத்தப்படும் என ஒன்றிய அரசு அறிவித்தது. இந்நிலையில், நதிகள் இணைப்பு திட்டம் குறித்து ஏற்கனவே 2 முறை காணொலியில் ஆலோசனை நடத்தப்பட்ட நிலையில், டெல்லியி்ல் நேற்று ஒன்றிய நீர்வளத் துறை அமைச்சகத்தில், அதன் தலைமை செயலாளர் பங்கஜ் குமார் தலைமையில் 3வது கூட்டம்  நேரடியாக நடைபெற்றது. இதில் தமிழகம், கர்நாடகா, கேரளா, புதுவை, ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களின் செயலாளர்கள் கலந்து கொண்டனர். தமிழகத்தின் தரப்பில் நீர்வளத்துறையின் கூடுதல் தலைமை செயலாளர் சந்தீப் சக்சேனா, காவிரி ஆணையத்தின் தொழில்நுட்ப தலைவர் சுப்ரமணியன் ஆகியோர் கலந்து கொண்டார். பிற்பகல் 3 மணிக்கு தொடங்கிய கூட்டம், ஒன்றரை மணி நேரம் நடைபெற்றது. இதில், மாநிலங்களின் ஆலோசனைகள், கருத்துக்கள், திட்டம் பற்றிய சாதக, பாதங்கள் குறித்து கேட்கப்பட்டது.

மாநிலங்கள் கூறிய கருத்துகள் வருமாறு: தமிழகம்: காவிரி - கோதாவரியில் உள்ள முக்கிய நதிகளை இணைப்பதால் மேகதாதுவில் கர்நாடகா அணை கட்டும் முயற்சியை மேற்கொள்ளக் கூடாது.  முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பாக உள்ளது என்று உச்ச நீதிமன்றம் தெளிவாக தெரிவித்து விட்டது. இருப்பினும், புதிய அணை கட்ட வேண்டும் என கேரள அரசு சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளது. அதனை நிராகரிக்க வேண்டும்.கர்நாடகா: நதிகள் இணைப்பு திட்டத்திற்கு கர்நாடகா ஒத்துழைக்கிறது. ஆனால், மேகதாதுவில் அணை கட்டுவது எங்கள் மாநிலம் சம்பந்தப்பட்ட விவகாரம். இது நீரை சேமித்து வைப்பதற்காக கட்டப்படுகிறது. நதிகள் இணைப்பு திட்டத்துக்காக, அதற்கு தடை விதிக்கக் கூடாது.

காவிரி - தென் பெண்ணையாறு இணைப்புக்கு உடன்பட மாட்டோம். அதனால், தமிழகத்திற்கு தான் அதிக நீர் கிடைக்கும். ஒருவேளை இத்திட்டத்தை நிறைவேற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டால், கர்நாடகாவுக்கு எவ்வளவு தண்ணீர் ஒதுக்கப்படும் என்பதை முன்கூட்டியே முடிவு செய்ய வேண்டும்.புதுவை: காவிரியில் இருந்து எங்கள் மாநிலத்திற்கு தண்ணீர் பெறுவது இல்லை. அதனால், தென்பெண்ணை ஆற்றையும் வராக நதியையும் (சங்கராபரணி ஆறு) இணைத்தால், புதுவை பயன் பெறும்.தெலுங்கானா: எங்கள் மாநிலத்தில் இருப்பது ஒரே நதிதான். இந்த திட்டத்தால் மற்ற மாநிலங்கள்தான் பயனடையும். இதனால், எங்கள் மாநிலம்தான் அதிக வறட்சியை சந்திக்க நேரிடும். அதனால், நதிகள் இணைப்பு திட்டத்திற்கு நாங்கள் ஒப்புதல் வழங்க மாட்டோம். கூட்டத்தில் பங்கேற்ற மற்ற மாநிலங்கள், நதிகள் இணைப்பு திட்டத்திற்கு ஆதரவு அளித்தன. இந்த மாநிலங்களின் 4வது கூட்டம் விரைவில் நடத்தப்பட உள்ளது.

Tags : Rivers ,Tamil ,Nadu ,Delhi , Tamil Nadu authorities
× RELATED நதிகளுக்கான சர்வதேச நடவடிக்கைகள் தினவிழா