×

திருச்சி-காரைக்குடி மின்சார ரயில் போக்குவரத்து விரைவில் தொடங்கும்: ரயில்வே பாதுகாப்பு ஆணையர் பேட்டி

புதுக்கோட்டை: திருச்சி- காரைக்குடி வழித்தடத்தில் 89 கிலோ மீட்டருக்கு மின்சார ரயில் பாதை மாற்றும் பணி ரூ.90 கோடியில் கடந்த ஒரு ஆண்டாக நடைபெற்று வந்தது. இந்த வழித்தடத்தில் மின் பாதை அமைக்கும் பணிகள் நிறைவடைந்தன. இதனைத்தொடர்ந்து ரயில்வே பாதுகாப்பு ஆணையர் குமார் ராய் நேற்று ஆய்வு மேற்கொண்டார். திருச்சியிலிருந்து காலையில் ரயில் இன்ஜினில் புறப்பட்ட அவர் குமாரமங்கலம், கீரனூர் உள்ளிட்ட பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டு புதுக்கோட்டை ரயில் நிலையத்திற்கு வந்தார். அங்கு நடைபெற்று வரும் பல்வேறு பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவருடன் வந்த ரயில்வே அதிகாரிகள் மின் பாதை அமைக்கும் பணி எவ்வாறு நடைபெற்றுள்ளது. அது முறையாக நடைபெற்று உள்ளதா? என்பது குறித்து ஆய்வு மேற்கொண்டு அதனை ரயில்வே பாதுகாப்பு ஆணையருக்கு தெரிவித்தனர்.

இதையடுத்து, ரயில்வே பாதுகாப்பு ஆணையர் குமார் ராய் அளித்த பேட்டி: திருச்சி- காரைக்குடி இடையே மின் பாதை அமைக்கும் பணி நிறைவடைந்துள்ளது. இதனை தற்போது ஆய்வு மேற்கொண்டுள்ளேன். இதுவரை நடத்தப்பட்ட ஆய்வில் எவ்விதமான குறைகளும் கண்டறியப்படவில்லை. பணிகள் நன்றாக நடந்துள்ளது. இன்று (நேற்று) மாலை சோதனை ஓட்டம் நடைபெறும். அதன்பிறகு அறிக்கை சமர்ப்பிக்கப்படும். அதன் பின்னர் திருச்சி-காரைக்குடி ரயில் பாதையில் ரயில்கள் ஓடத்தொடங்கும். இவ்வாறு அவர் கூறினார்.

சோதனை ஓட்டத்தில் ரயில் மோதி மூதாட்டி பலி
திருச்சியிலிருந்து காரைக்குடிக்கு மின்சார ரயில் சோதனை ஓட்டம் நேற்று காலை நடைபெற்றது. மாலை 3.30 மணிக்கு காரைக்குடியில் இருந்து புறப்பட்டு திருச்சி நோக்கி 100 கிலோ மீட்டர் வேகத்தில் ரயில் சென்று கொண்டிருந்தது. அப்போது கீரனூர் அருகே இளையாவயல் என்ற இடத்தில் தண்டவாளத்தில் நடந்து சென்ற கோவில்காடு பூசாரி சுருட்டையன் மனைவி செல்லம்மாள்(71) மீது ரயில் மோதியது. இதில், பலத்த காயமடைந்த மூதாட்டி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

செல்லம்மாளுக்கு காது கேட்காது என்றும் சற்று மனநிலை பாதிக்கப்பட்டவர் என்றும் கூறப்படுகிறது. இந்த தகவலறிந்த ரயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர். இதுபோல் புதுக்கோட்டை மாவட்டம் வெள்ளனூர் ரயில் நிலையத்தில் மின்சார கம்பியில் அடிபட்டு குரங்கு ஒன்றும் பலியானது.

Tags : Tiruchi-Karakudi Electric Rail Transport ,Railway ,Defence ,Minister , Trichy-Karaikudi, electric train, soon, Commissioner
× RELATED பொன்மலை ரயில்வே பணிமனையில் வேலைநேரம்...