தஞ்சை: தஞ்சை மண்டல திக கலந்துரையாடல் கூட்டம் நேற்று தஞ்சையில் நடந்தது. தலைவர் கி.வீரமணி தலைமை வகித்தார். பின்னர் அவர் அளித்த பேட்டி: தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்து 8 மாத காலத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நடத்துகிறது. இந்த தேர்தலில் திமுக கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. திமுக கூட்டணி அதிக இடங்களை கைப்பற்றும். தமிழக சட்டசபை முடக்கப்படும் என்ற முடக்குவாதம் எதிர்க்கட்சி தலைவருக்கு வரக்கூடாது என்று நாங்கள் நம்புகிறோம். எடப்பாடி பழனிசாமியை பார்த்து கோபப்படுவதை தவிர்த்து பரிதாபம் தான் வருகிறது. அரசியல் சட்டத்தில் அதற்கான வாய்ப்பு இல்லை. ஒருவேளை நடந்தால் அது அதிமுகவுக்குத்தான் ஆபத்தாக இருக்கும். அதன் பின்னர் நடைபெறும் தேர்தலில் திமுக கூட்டணி இன்னும் அதிக இடங்களை கைப்பற்றும். இவ்வாறு அவர் கூறினார்.
தொடர்ந்து தஞ்சை மாநகராட்சியில் போட்டியிடும் 51 வேட்பாளர்களையும் ஆதரித்து, தஞ்சை அண்ணா சிலை அருகே அவர் பேசுகையில், ‘‘பாஜக ஆட்சியில் பெண்களுக்கு 3ல் ஒரு பங்கு கூட இடஒதுக்கீடு அளிக்க சட்டமியற்றாத நிலையில், உள்ளாட்சி தேர்தலில் 50 சதவீத இடஒதுக்கீட்டை பெண்களுக்கு வழங்கியது திமுக அரசு. இதுதான் திராவிட ஆட்சி. இதுதான் தந்தை பெரியாரின் சமூக நீதி என நிரூபித்துள்ளார் முதலமைச்சர் ஸ்டாலின். இக்காட்சியை காணும் போது தேர்தல் முடிவு தெரியும் நாளில் மிகப்பெரிய வெற்றியை தமிழ்நாடு மக்கள் அளிக்க தயாராகிவிட்டனர் என்பதை காட்டுகிறது’’ என்றார்.