×

காஞ்சிபுரம் ரவுடி பிபிஜிடி சங்கரின் ரூ.25 கோடி மதிப்பிலான சொத்துக்கள் முடக்கம்: அமலாக்கத்துறை அதிரடி

சென்னை: காஞ்சிபுரம் ரவுடி பிபிஜிடி சங்கர் என்பவருக்கு சொந்தமான சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கம் செய்தது. ஏற்கெனவே ரவுடி பிபிஜிடி சங்கருக்கு தொடர்புடைய  இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. இந்த சோதனையில் 79 சொத்துக்கள், அதாவது ரூ.25 கோடி மதிப்பிலான சொத்துக்கள் இருப்பது தெரியவந்தது. ஆனால் இந்த சொத்துக்கள் யாருடையது என்ற விவரம் முழுமையாக தெரியாமல் இருந்த நிலையில், சொத்துக்கள் அனைத்தும் பினாமியின் பெயரில் இருந்தது என விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து சொத்துக்கள் அனைத்தையும் முடக்கம் செய்து அமலாக்கத்துறை நடவடிக்கை எடுத்தது.

ஏற்கெனவே சங்கர் மீது 15 வழக்குகளும், 3 குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. காஞ்சிபுர மாவட்ட காவல்துறையில் சங்கர் ரவுடி பட்டியலில் இருப்பதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதன் அடிப்படையிலேயே சோதனை நடத்தப்பட்டது. சென்னை புறநகர் பகுதியில் உள்ள நிலங்களை கையகப்படுத்துவது போன்ற செயல்களில் பிபிஜிடி சங்கர் ஈடுபட்டிருப்பதும் விசாரணையில் தெரியவந்தது. இந்நிலையில் சங்கர் சம்பாதித்த சொத்துக்களின் அடிப்படையில் சோதனை நடத்தப்பட்டு, ரூ.25 கோடி மதிப்பிலான சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கம் செய்தது.

ஏற்கெனவே காஞ்சிபுரம் மாவட்டத்தில் இது போன்று, தொழில் அதிபர்களை மிரட்டி பணம் பறிப்பது, நிலத்தை அபகரிக்கக்கூடிய சம்பவத்தில் ஈடுபடக்கூடிய ரவுடிகளின் பட்டியலை எடுத்து அவர்களின் நடவடிக்கைகளை கட்டுப்படுத்தவும், அவர்கள் மீது கைது நடவடிக்கை எடுப்பதற்குமான முயற்சியில் தமிழக காவல்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுக்கொண்டிருக்கின்றனர். ஏற்கெனவே ரவுடிகள் ஒழிப்பு தொடர்பாக ஏடிஎஸ்பி வெள்ளத்துரை தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு கண்காணிக்கப்படுகின்றனர். இந்நிலையில் காவல்துறை அளித்த தகவலின் பெயரில் தான், ரவுடி பிபிஜிடி சங்கர் சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கம் செய்துள்ளதாக காவல்துறையினர்  தெரிவித்துள்ளனர். 


Tags : Kanjipuram ,Rudi ,PPGT ,Sankar , Kanchipuram, Rowdy, PPGT Shankar, Rs 25 crore, property, freeze, enforcement department
× RELATED காஞ்சி இலக்கிய வட்ட கூட்டம்