திருப்புவனம் : இங்கிலாந்தில் நைட்டிங்கேல் விருது பெற்ற மண்ணின் மைந்தருக்கு கீழடியில் அவர் படித்த பள்ளியில் பாராட்டு விழா நடத்தப்பட்டது. சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே கீழடியை சேர்ந்தவர் டேனியல் விஜயராஜ். லண்டன் மருத்துவமனையில் 2003ல் இருந்து செவிலியராக பணிபுரிந்து வருகிறார். இவரது தந்தை விஜயராஜ், மதுரை காவல் துறையிலும், தாயார் சரோஜினி கீழடி அரசு பள்ளியில் தலைமையாசிரியராக பணியாற்றியவர். டேனியல் விஜயராஜின் மனைவி சாராள். இவர்களது மகள் மோனிகா லண்டனில் படித்து வருகிறார்.
கீழடி பள்ளியில் 8ம் வகுப்பு வரை படித்த டேனியல் விஜயராஜ் 9, 10ம் வகுப்புகளை மதுரை செயிண்ட் மேரிஸ் பள்ளியிலும், 11, 12ம் வகுப்புகளை கமுதி ஷத்திரிய நாடார் பள்ளியிலும், கல்லூரி படிப்பை மதுரை அமெரிக்கன் கல்லூரியிலும், செவிலியர் படிப்பை கிறிஸ்துவ கல்லூயிலும் படித்துள்ளார். கொரானோ பரவல் காலத்தில் நோயாளிகளை சிறப்பாக பராமரித்ததற்காக லண்டனில் வழங்கப்படும் உயரிய விருதான நைட்டிங்கேல் டேனியல் விஜயராஜ் விருது பெற்றுள்ளார். இவருக்கு பாராட்டு விழா நேற்று கீழடியில் அவர் படித்த பள்ளியில் நடந்தது. ஊராட்சி மன்ற தலைவர் வெங்கடசுப்பிரமணியன் தலைமையில் கிராமமக்கள் டேனியல் விஜயராஜை கவுரவித்து பரிசு வழங்கினர்.
தமிழகத்திற்கே பெருமை
இங்கிலாந்தில் பிறந்து வளர்ந்து அந்நாட்டில் ராணுவத்தில் சிறப்பாக பணிபுரிந்த நைட்டிங்கேல் அம்மையாரின் பிறந்த தினமான மே 12ம் தேதி செவிலியர் தினமாக கடைபிடிக்கப்படுகிறது. அவரை நினைவு கூரும் வண்ணம் இங்கிலாந்தில் வருடம்தோறும் நைட்டிங்கேல் விருது வழங்கப்படுகிறது. இந்தாண்டிற்கான விருது டேனியல் விஜயராஜ்க்கு வழங்கப்பட்டிருப்பது தமிழகத்திற்கே பெருமை சேர்க்கும் விதமாக கருதப்படுகிறது.