கம்பம்: உள்ளாட்சி தேர்தலை நடத்தாமல் அதிமுகவினர் ஊராட்சிகளில் கோடிக்கணக்கில் கொள்ளையடித்ததாக நாஞ்சில் சம்பத் கூறினார்.தேனி மாவட்டம், கூடலூர் மற்றும் கம்பம் நகர்மன்ற தேர்தலில் போட்டியிடும் திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து கூடலூர் மற்றும் கம்பத்தில் நேற்று முன்தினம் பிரசார கூட்டம் நடந்தது. இதில் நாஞ்சில் சம்பத் பேசுகையில், ‘கடந்த 10 ஆண்டுகளாக நடைபெறாமல் இருந்த உள்ளாட்சி தேர்தலை, தற்போது நடத்த இருப்பது தான் முதல்வர் மு.க.ஸ்டாலினின் பெரும் சாதனையாகும். நீட் தேர்வு குறித்து ஒரே மேடையில் விவாதிக்கலாம் என முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அழைப்பு விடுத்துள்ள எடப்பாடி பழனிசாமியுடன் நான் விவாதிக்க தயார்.
என்னுடன் எடப்பாடி பழனிசாமி விவாதிக்க தயாரா? கடந்த அதிமுக ஆட்சியில் அமைச்சர்களாக இருந்த வீரமணி, தங்கமணி, வேலுமணி ஆகியோர் கொள்ளையடித்தனர். அதிமுக ஆட்சி காலத்தில் உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடத்தாமல் ஒரு ஊராட்சிக்கு ஒரு கோடி ரூபாய் ஊழல் செய்தவர்கள்தான் அதிமுகவினர். திமுக வேட்பாளர்களுக்கு போடுகிற ஓட்டு பூஞ்சோலையாக மாறும். அதிமுகவினருக்கு போடும் ஓட்டு கடலில் விழுந்த மழையாகும். பாஜவிற்கு ஓட்டு போட்டால் வகுப்பு வாதம் அதிகரிக்கும். எனவே திமுகவிற்கு வாக்களியுங்கள்’’என்றார்.