×

2வது கணவருக்கு கொலை மிரட்டல்!: பாஜக முன்னாள் எம்பி. சசிகலா புஷ்பாவுக்கு நிபந்தனை முன்ஜாமீன் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு..!!

சென்னை: கொலை மிரட்டல் விடுத்ததாக கணவர் அளித்த புகாரின் அடிப்படையில் பதிவு செய்யப்பட்ட வழக்கில் முன்னாள் எம்.பி. சசிகலா புஷ்பாவுக்கு நிபந்தனை முன் ஜாமீன் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை அண்ணாநகரில் உள்ள தனது வீட்டில் ராஜா மற்றும் அமுதா ஆகியோருடன் சேர்ந்து தன்னை தாக்கி, கொலை மிரட்டல் விடுத்ததாக முன்னாள் எம்.பி., சசிகலா புஷ்பாவுக்கு எதிராக அவரது கணவர் ராமசாமி, ஜெ.ஜெ.நகர் போலீசில் புகார் அளித்திருந்தார். புகாரின் அடிப்படையில், சசிகலா புஷ்பா உள்பட 3 பேருக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்த  வழக்கில், தனக்கு முன் ஜாமீன் வழங்கக்கோரி முன்னாள் எம்.பி. சசிகலா புஷ்பா, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.  அந்த மனுவில், தொழில் சம்பந்தமாக என்னை சந்திக்க வந்த இருவரும் புறப்பட இரவு 11 மணிக்கு மேலாகி விட்டது.  கொரோனா ஊரடங்கு அமலில் இருந்ததால் வீட்டில் தங்க அனுமதித்தேன். எனக்கு எதிராக பொய் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. எனது கணவர் ராமசாமி தான் என்னை மிரட்டினார் என்று தெரிவித்துள்ளார். இந்த மனு நீதிபதி பொங்கியப்பன் முன் விசாரணைக்கு வந்த போது, புலன் விசாரணை நிலுவையில் உள்ளதால் சசிகலா புஷ்பாவுக்கு முன் ஜாமீன் வழங்க கூடாது என்று போலீஸ் தரப்பு வழக்கறிஞர் ஆட்சேபம் தெரிவித்தார்.

வழக்கை விசாரித்த நீதிபதி, மனுதாரர் மீது சாட்டப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள், ஜாமீனில் விடுதலை செய்யக் கூடிய பிரிவுகளில் பதிவு செய்யப்பட்டுள்ளது. எனவே, 25 ஆயிரம் ரூபாய்க்கான சொந்த ஜாமீனிலும், அதே தொகைக்கான இருநபர் ஜாமீனிலும் அவருக்கு முன் ஜாமீன் வழங்கப்படுகிறது. அடுத்த 15 நாட்களுக்கு ஜெ.ஜெ. நகர் போலீசில் அவர் ஆஜராக வேண்டும். சாட்சிகளை கலைக்க கூடாது, தலைமறைவாகக் கூடாது என்று நீதிபதி நிபந்தனை விதித்தார்.


Tags : Bajaka ,High Court of Chennai ,Sasikala Pushpa , Former BJP MP Sasikala Pushpa, Pre-Bail, Chennai High Court
× RELATED வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை: பாஜக...