விருத்தாசலம்: கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் சுமார் 2 ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த விருத்தகிரீஸ்வரர் கோயிலில் ஆண்டு தோறும் மாசி மாதம் நடைபெறும் மாசிமக திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றதாகும். விருத்தாசலம் பகுதியை சுற்றியுள்ள 200க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் இத்திருவிழாவைக்காண கோயிலுக்கு வருவார்கள். இந்த ஆண்டு மாசிமகத் திருவிழா கடந்த 8ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து தினமும் பஞ்ச மூர்த்திகள் வாகனத்தில் எழுந்தருளி வீதியுலா நடைபெற்று வருகின்றது.
கடந்த 13ம் தேதி 6ம் திருவிழாவாக கோயிலைக் கட்டிய விபசித்து முனிவருக்கு விருத்தகிரீஸ்வரர் காட்சியளித்தல் என்ற ஐதீக திருவிழா நடந்தது.விழாவின் சிகர நிகழ்ச்சியாக நேற்று காலையில் தேரோட்டம் நடந்தது. முன்னதாக விநாயகர், சுப்ரமணியர், விருத்தகிரீஸ்வரர், விருத்தாம்பிகை மற்றும் சண்டிகேஸ்வரர் ஆகிய பஞ்ச மூர்த்திகளுக்கு பால், தயிர், இளநீர், பன்னீர், தேன், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பல்வேறு பொருட்களால் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தனர்.
பின்னர் சிவாச்சாரியார்கள் மகா தீபாராதனைகள் காட்ட விருத்தாம்பிகை உடனுறை விருத்தகிரீஸ்வரர் மற்றும் பஞ்சமூர்த்திகள் அலங்கரிக்கப்பட்ட 5 தேர்களில் எழுந்தருளினர். அப்போது பக்தர்கள் எழுப்பிய ஓம் நமச்சிவாய கோஷங்கள் விண்ணை பிளக்க, தேரானது நான்கு கோட்டைகளையும் வலம் வந்து நிலையை அடைந்தது. 10ம் நாள் திருவிழாவாக இன்று (17ம் தேதி) மாசி மக தீர்த்தவாரி உற்சவமும், நாளை (18ம் தேதி) தெப்ப உற்சவமும், 19ம் தேதி சண்டிகேஸ்வரர் உற்சவமும், 20ம் தேதி முதல் மார்ச் 1ம் தேதி வரை விடையாற்றி உற்சவமும் நடைபெறுகிறது.
ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் பரணிதரன், செயல் அலுவலர் முத்துராஜா மற்றும் விழாக்குழுவினர் செய்து வருகின்றனர். விருத்தாசலம் ஏஎஸ்பி அங்கிட் ஜெயின் இன்ஸ்பெக்டர் விஜயரங்கன் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் மற்றும் ஊர்காவல் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.