லக்னோ : உத்தரப் பிரதேசத்தில் திருமண விழாவிற்கு வந்து இருந்த 13 பெண்கள் கிணற்றுக்குள் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. உத்தரப் மாநிலம் குஷிநகர் மாவட்டத்தில் உள்ள நெபுவா நவுராங்கியா என்ற இடத்தில் இந்த கோர விபத்து நிகழ்ந்துள்ளது. திருமண நிகழ்ச்சிக்கு வந்து இருந்த பெண்கள், சிறுமிகள் உள்ளிட்டோர் கிணறு ஒன்றின் மேல் இருந்த பலகையில் அமர்ந்து இருந்தனர். அப்போது சுமை தாங்காமல் திடீரென பலகை உடைந்ததால் அதன் மீது அமர்ந்து இருந்த அனைவரும் கிணற்றுக்குள் விழுந்தனர்.
இந்த கோர விபத்து குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு மீட்புபடையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கிணற்றுக்குள் விழுந்தவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.இதில் 13 பெண்கள் உயிரிழந்த நிலையில், 15-க்கும் அதிகமான பெண்கள், சிறுமிகள் காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். உயிரிழந்தவர்களின் உடல்கள் மீட்கப்பட்டு பிரேதபரிசோதனைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.இதனிடையே உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு குஷிநகர் மாவட்ட நிர்வாகம் சார்பில் ரூ. 4 லட்சம் இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது. குஷிநகர் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துள்ள பிரதமர் மோடி, உள்ளூர் நிர்வாகத்தால் சாத்தியமான உதவிகள் செய்யப்படும் என்று உறுதி அளித்தார். மேலும் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தும் ஆறுதல் கூறியுள்ளார்.