×

நடிகர் சிரஞ்சீவியுடன் இளம்பெண் சபரிமலை தரிசனத்திற்கு வந்தாரா?: தேவசம் போர்டு மறுப்பு

திருவனந்தபுரம்: பிரபல தெலுங்கு நடிகர் சிரஞ்சீவியுடன் சபரிமலை தரிசனத்திற்கு ஒரு இளம்பெண்ணும் வந்ததாக சமூக வலைதளங்களில் தகவல் பரவியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மாசி மாத பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை தற்போது திறக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கடந்த 13ம் தேதி பிரபல தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி, அவரது மனைவி, சிரஞ்சீவியின் நண்பர் மற்றும் அவரது மனைவி ஆகியோர் தரிசனத்திற்கு வந்திருந்தனர்.தரிசனம் செய்த பிறகு கோயில் கொடிமரம் அருகே நின்று கொண்டு சிரஞ்சீவி உள்பட அவர்கள் அனைவரும் புகைப்படம் எடுத்துக் கொண்டனர். இந்நிலையில், ஆந்திராவுக்கு திரும்பிய பின்னர் சபரிமலை சென்ற போது எடுத்த புகைப்படங்களை நடிகர் சிரஞ்சீவி தன்னுடைய டிவிட்டரில் வெளியிட்டார்.

 இதைப் பார்த்த சிலர், நடிகர் சிரஞ்சீவியுடன் இருப்பது 50 வயதுக்கும் குறைவான இளம்பெண் என்றும், சபரிமலைக்கு சிரஞ்சீவி எப்படி இளம்பெண்ணை அழைத்துச் செல்லலாம் என்றும் கருத்து தெரிவித்தனர். சிறிது நேரத்திலேயே இந்த புகைப்படங்கள் சமூக  வலைதளங்களில் வைரலாக பரவியது. ஆனால், இதை தேவசம் போர்டு மறுத்துள்ளது.இது குறித்து திருவிதாங்கூர் தேவசம்போர்டு தலைவர் அனந்தகோபன் கூறியது: சிரஞ்சீவியுடன் வந்தது ஆந்திராவை சேர்ந்த ஒரு தனியார் குழும இயக்குனர் சுரேஷ் மற்றும் அவரது மனைவி மதுமதி ஆவர்.மதுமதி என்பவரைத் தான் 50 வயதுக்கு குறைவான இளம்பெண் என்று சமூக வலைதளங்களில் பொய்யாக பிரசாரம் செய்யப்பட்டு வருகிறது. ஆனால், அவருக்கு 55 வயது ஆகிறது. ஆதார் கார்டில் உள்ளதின்படி அவரது பிறந்த வருடம் 1966. இதுபோன்ற பொய்யான பிரசாரங்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். பக்தர்களிடையே வீண் குழப்பத்தை ஏற்படுத்துவதை தவிர்க்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.



Tags : Sabarimala darshan ,Chiranjeevi ,Devasam , With actor Chiranjeevi Young Sabarimala Did you come to Darshan ?: Angel board denial
× RELATED திருத்தணி அருகே வாகன சோதனையின்போது ரூ.25.90 லட்சம் பறிமுதல்..!!