அகமதாபாத்: ‘எனது ரோல் மாடல் - நாதுராம் கோட்சே’ என பள்ளி மாணவர்கள் இடையே பேச்சுப் போட்டி நடத்தப்பட்ட விவகாரம் குஜராத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.மகாத்மா காந்தியை சுட்டுக் கொன்ற நாதுராம் கோட்சேவை சில வலதுசாரி அமைப்புகள் புகழ்ந்து வருகின்றன. இந்நிலையில், குஜராத்தின் வல்சாத் மாவட்டத்தில் தனியார் பள்ளி ஒன்றில் கடந்த 14ம் தேதி, ‘எனது ரோல் மாடல் - நாதுராம் கேட்சே’ என்ற தலைப்பில் மாணவ, மாணவிகள் இடையே பேச்சுப்போட்டி நடத்தப்பட்டுள்ளது. இந்தப் போட்டியை மாவட்ட இளைஞர் மேம்பாட்டு அதிகாரி மிடாபென் கவ்லி என்பவர் ஏற்பாடு செய்து நடத்தி உள்ளார்.
மாவட்ட நிர்வாகம் சார்பில் நடத்தப்பட்ட இந்த போட்டியில் மாணவி ஒருவர் வெற்றி பெற்றதாக உள்ளூர் பத்திரிகையில் செய்தி வெளியானதைத் தொடர்ந்து பரபரப்பு ஏற்பட்டது. தகவலறிந்ததும் உடனடியாக சம்மந்தப்பட்ட அதிகாரியை சஸ்பெண்ட் செய்து மாநில விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சகம் நேற்று நடவடிக்கை எடுத்துள்ளது. இது தொடர்பாக விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.