×

2 ஆண்டுகளாக அமாவாசை, பவுர்ணமி நாளில் நள்ளிரவு பூஜை ஆசிரமத்தில் கல்லூரி மாணவி விஷம் குடித்து தற்கொலை: பூசாரியிடம் தீவிர விசாரணை நடத்த திட்டம்

சென்னை: ஊத்துக்கோட்டை அருகே பூண்டி அடுத்த வெள்ளாத்துக்கோட்டை கிராமத்தில் கடந்த 20 ஆண்டுகளாக முனுசாமி என்ற பூசாரி ஆசிரமம் நடத்தி வருகிறார். இந்நிலையில், பெரியபாளையம் அருகே செம்பேடு பகுதியை சேர்ந்த ராமகிருஷ்ணன் மகள் ஹேமமாலினி (20). இவர், திருவள்ளூர் அருகேயுள்ள தனியார் கல்லூரியில் பிஎஸ்சி கம்ப்யூட்டர் சயின்ஸ் 3ம் ஆண்டு படித்து வந்தார். இவருக்கு கடந்த ஓராண்டுக்கு முன் உடல்நிலை சரியில்லாததால் அந்த கோயிலில் உள்ள பூசாரி முனுசாமியை அணுகியுள்ளார். அப்போது, ஹேமமாலினிக்கு நாகதோஷம் இருப்பதாக கூறி அமாவாசை, பவுர்ணமியன்று பூஜை செய்தால் தோஷம் நீங்கும் என பூசாரி கூறியுள்ளார். இதனை நம்பி, கடந்த ஆண்டு பூசாரி, ஹேமமாலினிக்கு அமாவாசை, பவுர்ணமி நாட்கள் மட்டுமின்றி இரவு நேரத்தில் மாந்திரீகம் பூஜை செய்து வந்துள்ளார்.

இந்நிலையில்கல்லூரி திறந்த பின்னும், கல்லூரி முடித்த பின்னும் வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று நாட்கள் கோயிலுக்கு சென்று அங்கேயே தங்கி வந்துள்ளதாக கூறப்படுகிறது. கடந்த சில நாட்களாக  ஹேமமாலினியை பூசாரி பூஜைக்கு வருமாறு அழைத்துள்ளார். 13ம் தேதி இரவு 12 மணிவரை பூசாரிக்கு தேவையான அனைத்து பணிகளையும் செய்து கொடுத்துள்ளார் ஹேமமாலினி. இந்நிலையில், கடந்த 14ம் தேதி விடியற்காலை 4 மணி அளவில் ஹேமமாலினி பூச்சி மருந்து குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். அவர் உடல்நிலை கவலைக்கிடம் ஆனதை தொடர்ந்து ஹேமமாலினியின் பெரியம்மா இந்திராணியிடம் பூசாரி முனுசாமி மருத்துவமனைக்கு அழைத்து செல்லுமாறு கூறியுள்ளார்.

பின்னர், அவர் ஆட்டோவில் ஹேமமாலினியை வெங்கல் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சைக்கு சேர்த்துள்ளனர்.பின்னர், ஹேமமாலினிக்கு சிகிச்சை அளித்தபின் அவரை திருவள்ளூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி உள்ளனர். ஆபத்தான நிலையில் திருவள்ளூர் அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஹேமமாலினி சிகிச்சை பலனின்றி  நேற்று காலை உயிரிழந்தார்.  இதுகுறித்து, பென்னலூர்பேட்டை காவல் நிலையத்தில் மகள் சாவில் சந்தேகம் உள்ளதாக புகார் கொடுத்தனர். மேலும், பூசாரியிடம் தீவிர விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர்.  ஆசிரமத்தில் தங்கியிருந்த கல்லூரி மாணவி,  விஷம் குடித்து தற்கொலை செய்த கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags : New Moon ,Pavurnami , College student commits suicide by drinking poison at midnight puja ashram on New Moon and Pavurnami for 2 years: Plan to hold serious inquiry with priest
× RELATED மூலை‌ அனுமார் கோயிலில் சிறப்பு வழிபாடு