சென்னை: மணலி மண்டலம் 20வது வார்டு பாஜ வேட்பாளர் தனசேகரை ஆதரித்து பாஜ மாநில தலைவர் அண்ணாமலை நேற்று காலை மணலி பெரிய தோப்பு பகுதியில் பிரசாரம் செய்தார். அப்போது, அதே 20வது வார்டில் தேமுதிக சார்பில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு தேர்தல் களத்தில் இருந்த மாநில பொதுக்குழு உறுப்பினர் வேம்படியான் தேமுதிகவில் இருந்து விலகி அண்ணாமலை முன்னிலையில் பாஜவில் இணைந்தார். அப்போது, மக்கள் முன்னிலையில் பிரசாரத்தில் வைத்து அண்ணாமலை பாஜவின் கலர் துண்டை அவருக்கு அணிவித்து வரவேற்றார். தேமுதிக வேட்பாளர் பாஜ வேட்பாளருக்கு ஓட்டு கேட்டது அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.