×

வெளிநாட்டில் இருந்து பெண் பேசுவது போல் பழகி பணம் பறித்த சகோதரர்கள் இருவர் உபியில் கைது: போலீசார் நடவடிக்கை

சென்னை: வெளிநாட்டில் இருந்து பெண் பேசுவது போன்று சமூக வலைதளங்களில் பழகி பணம் பறித்த சகோதரர்கள் இருவர் உத்திரபிரதேசத்தில் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 13 செல்போன்கள், 4 லேப்டாப், ரொக்கம் ரூ.51,000 பறிமுதல் செய்யப்பட்டது. சென்னையைச் சேர்ந்த முதியவர் ஒருவர், சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவாலிடம் அளித்த புகாரில், ‘லண்டனைச் சேர்ந்த இவா வில்லியம்ஸ் என்ற பெண் தன்னுடன் வாட்ஸப்பில் பேசி வந்ததாகவும், சென்னையில் நிலம் வாங்கும் பொருட்டு, லண்டனில் இருந்து இந்தியா வருவதாகவும் தெரிவித்திருந்தார்.

மேலும் அந்த பெண்மணி ஒரு நாள் போன் செய்து தான் டெல்லி வந்து விட்டதாகவும் தன்னிடம் ரூபாய் 5 கோடிக்கு வரைவோலை இருந்ததால், கஸ்டம் அதிகாரிகள் பிடித்து வைத்துள்ளதாகவும், தன்னை விடுவிக்க பிராசஸிங் பீஸ், கஸ்டம்ஸ் பீஸ் ஆகியவற்றை செலுத்துமாறு கூறியதால் 14,62,100 ரூபாயை அனுப்பி வைத்ததாகவும், மேற்படி மோசடியில் ஈடுபட்ட நபர்களை கண்டறிந்து தனது பணத்தை பெற்று தருமாறு’ குறிப்பிட்டிருந்தார். இப்புகாரின் அடிப்படையில் சென்னை மத்திய குற்றப்பிரிவு, சைபர் கிரைம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு புலன் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

விசாரணையில் மோசடி கும்பலின் வங்கி  கணக்கிலிருந்து உத்தரப்பிரதேச மாநிலம் அலிகார் என்ற ஊரிலுள்ள ஏடிஎம் மூலமாக பணம் எடுக்கப்பட்டது தெரியவந்தது. மேலும், செல்போன் எண்களின் அழைப்பு விவரங்களை ஆராய்ந்தும், சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்தும் குற்றவாளிகள் குறித்த தகவல்கள் திரட்டப்பட்டன. சைபர் கிரைம் உதவி ஆணையாளர் தலைமையிலான தனிப்படை டெல்லி மற்றும் அலிகாரில் விசாரணை நடத்தி மேற்படி குற்றச்செயலில் ஈடுபட்ட டெல்லி, ஜமாய் நகரை சேர்ந்த மஜித் சல்மானி (42), சகோரர் ஷானு (36) ஆகிய இருவரை கைது செய்னர். அவர்களிடமிருந்து 10 டெபிட் கார்டுகள், 3 செல்போன்கள் மற்றும் சிம்கார்டுகள் கைப்பற்றப்பட்டது.

மேலும் மேற்படி மோசடிக்கு மூளையாக செயல்பட்ட இம்மானுவேல் சுக்கு என்ற நைஜீரிய நாட்டைச் சேர்ந்த நபர் டெல்லியில் தங்கியிருந்த வீட்டை சோதனை செய்து  4 லேப்டாப், 10 செல்போன்கள், 9 சிம்கார்டுகள், 1 வை-பை டாங்குள் மற்றும் ரூ. 51,000 ரொக்கம் ஆகியவற்றை கைப்பற்றியுள்ளனர். நைஜீரிய நாட்டைச் சேர்ந்த குற்றவாளி இம்மானுவேல் சுக்கு தொடர்பான தகவல்கள் சேகரிக்கப்பட்டு விரைவில் கைது செய்யப்படுவார். ஆகவே, பொதுமக்கள் சமூக வலைதளங்களிலோ, வாட்ஸப்பிலோ வெளிநாட்டவர் என்ற பெயரிலும் தொடர்பு கொள்ளும் நபர்களிடம் எச்சரிக்கையாக இருக்குமாறும், பணம் அனுப்புமாறு கூறுபவர்களின் தொடர்பினை உடனடியாக துண்டிக்க வேண்டும் என சென்னை போலீசார் தெரிவித்துள்ளனர்.

Tags : UP , Two brothers arrested in UP for extorting money from women
× RELATED உ.பியில் மாற்றத்திற்கான அலை வீசுகிறது: அகிலேஷ் நம்பிக்கை