கம்பம்: கம்பம் பகுதியில் பன்னீர் திராட்சை சாகுபடி ஓய்ந்த நிலையில், தோட்டங்களில் புதிய கொடி அமைக்கும் பணியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். தேனி மாவட்டம், கம்பம் மற்றும் அதனை சுற்றியுள்ள கே.கே.பட்டி, சுருளிப்பட்டி, என்.டி.பட்டி, ஆனைமலையான்பட்டி, கூடலூர் ஆகிய ஊர்களில் திராட்சை சாகுபடி அதிகளவில் நடக்கிறது. இதனால், ஆயிரக்கணக்கான கூலித்தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கிறது. இப்பகுதியில் விளையும் விதையுள்ள பன்னீர் திராட்சை மருத்துவக் குணம் உள்ளதால், கேரளா மற்றும் வெளிநாடுகளுக்கு அனுப்பப்படுகிறது. கடந்த வருடம் டிசம்பர் வரை பெய்த பருவமழையால் பெருமளவில் பன்னீர் திராட்சையில் வெடிப்பு ஏற்பட்டு விவசாயிகளுக்கு இழப்பு ஏற்பட்டது.
இதனிடையே, ஜனவரி முதல் திராட்சை உற்பத்தி குறைய தொடங்கியது. பெருமளவில் குளிர் காலத்தில் அதிகமாக விளையக்கூடிய திராட்சை, பிப்ரவரி மாதம் விளைச்சல் குறையத் தொடங்கும். அப்போது, கம்பம் பகுதியில் பன்னீர் திராட்சை விலை ஏற்றுத்துடன் காணப்படும். இந்நிலையில், பன்னீர் திராட்சைக்கு சரியான விலை இல்லாததாலும், முறையான ஏற்றுமதி தளம் இல்லாததாலும் விவசாயிகள் கவலை அடைய தொடங்கியுள்ளனர். ஒரு ஏக்கருக்கு செலவிடும் தொகை அளவுக்கு வருவாய் இல்லை என கவலை அடைகின்றனர்.
இதனால், திராட்சை விவசாயம் செய்ய விவசாயிகள் ஆர்வம் காட்டுவதில்லை. இருந்த போதும் அதிக முதலீடு செய்து திராட்சை தோட்டம் அமைக்கின்றனர். அந்த தோட்ட அமைப்பை மாற்றினால் லட்சக்கணக்கில் செலவழித்த பணம் நஷ்டம் அடையும் என்பதால் வேறு வழியின்றி புதிய திராட்சை கொடிகளை அமைத்து மராமத்து பணிகளை செய்து வருவதாக திராட்சை விவசாயிகள் கூறுகின்றனர்.