ராணிப்பேட்டை : ராணிப்பேட்டை மாவட்ட எல்லையான சீக்கராஜபுரத்தில் வீரமங்கை வேலுநாச்சியார் அலங்கார ஊர்திக்கு உற்சாக வரவேற்பு நிகழ்வு கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தலைமையில் நடைபெற்றது. இதில், திரளான பொதுமக்கள் மலர் தூவியும், பட்டாசுகள் வெடித்தும் அலங்கார ஊர்தியை வரவேற்றனர்.
ஜனவரி 26ம் தேதி சென்னையில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் சுதந்திரத்திற்காக பாடுபட்ட தியாகிகளின் நினைவைப் போற்றும் விதமாக ஆங்கிலேயர்களை எதிர்த்து போரிட்ட மருது சகோதரர்கள், சிவகங்கையை மீட்ட வீரமங்கை வேலு நாச்சியார், வேலுநாச்சியாரின் போர்ப்படையில் பெண்கள் படைக்கு தலைமை தாங்கி வெள்ளையர்களின் ஆயுத கிடங்கை அழித்து உயிர் தியாகம் செய்த வீராங்கனை குயிலி மற்றும் வீரபாண்டிய கட்டபொம்மன் போன்ற சுதந்திர போராட்ட வீரர்கள் உயிரோட்டமாக காட்சி தரும் அலங்கார ஊர்திகள் வடிவமைக்கப்பட்டு குடியரசு தின விழாவில் பங்கேற்றன. இதனை பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் கண்டு களித்தனர்.
இந்நிலையில், குடியரசு தின விழாவில் பங்கேற்ற வீரமங்கை வேலு நாச்சியார் அலங்கார ஊர்தியை பொதுமக்கள் அனைவரும் கண்டுகளிக்க வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார். அதன்படி, வீரமங்கை வேலு நாச்சியார் அலங்கார ஊர்தியானது நேற்று வேலூர் மாவட்டத்தில் இருந்து ராணிப்பேட்டை மாவட்ட எல்லையான சித்தூர்- சென்னை நெடுஞ்சாலை சீக்கராஜபுரம் சோதனைச் சாவடியை நேற்று மாலை 5 மணியளவில் வந்தடைந்தது.
வீரமங்கை அலங்கார ஊர்திக்கு கலெக்டர் பாஸ்கர பாண்டியன் மற்றும் எஸ்பி தீபா சத்யன் ஆகியோர் மங்கள வாத்தியங்கள் முழங்க மலர் தூவி உற்சாக வரவேற்பு அளித்தனர். வீரமங்கை வேலு நாச்சியார் அலங்கார ஊர்தியைக் காண வந்த பொதுமக்கள் பட்டாசுகள் வெடித்தும், மலர் தூவியும் வரவேற்று ஆர்வத்துடன் கண்டு ரசித்தனர். இதை முன்னிட்டு தப்பாட்டம், கோலாட்டம் உள்ளிட்ட கலைநிகழ்ச்சிகள் நடந்தது.
இதில், டிஆர்ஓ முஹம்மது அஸ்லம், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் லோகநாயகி, கலெக்டர் நேர்முக உதவியாளர் (பொது) சுரேஷ், சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியர் தாரகேஸ்வரி, ராணிப்பேட்டை ஆர்டிஓ பூங்கொடி, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் உஷா, கலால் உதவி ஆணையர் சத்தியபிரசாத், ராணிப்பேட்டை டிஎஸ்பி பிரபு, வாலாஜா தாசில்தார் ஆனந்தன், திமுக ஒன்றிய செயலாளர்கள் முருகன், சேஷா வெங்கட், சண்முகம், ஒன்றிய குழு துணைத்தலைவர் ராதாகிருஷ்ணன், ஒன்றிய குழு உறுப்பினர் செல்வம், ஊராட்சி மன்ற தலைவர்கள் கோகுல், ஷியாமளா தினகரன் ஆகியோர் கலந்து கொண்டு வரவேற்றனர்.
அங்கிருந்து புறப்பட்ட அலங்கார ஊர்தி பெல், அக்ராவரம் கூட்ரோடு, டிஆர் தியேட்டர், ராணிப்பேட்டை ரயில்வே ஸ்டேஷன் சாலை வழியாக இரவு 8 மணியளவில் முத்துகடை பஸ் நிலையம் வந்தடைந்தது. வழியெங்கும் சாலைகளில் திரண்டிருந்த பொதுமக்கள் வேலு நாச்சியார் அலங்கார ஊர்திக்கு மலர் தூவி உற்சாக வரவேற்பு அளித்தனர்.