பொள்ளாச்சி : பொள்ளாச்சி நகராட்சி வார்டுகளில் போட்டியிடும் திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து நேற்று பொள்ளாச்சி தேர்நிலையம் அருகே அமைச்சர் செந்தில்பாலாஜி மற்றும் திரைப்பட இயக்குனர் கரு.பழனியப்பன் ஆகியோர் பிரசாரம் மேற்கொண்டனர். தெற்கு மாவட்ட பொறுப்பாளர் டாக்டர் வரதராஜன் தலைமை தாங்கினார்.
பிரசாரத்தின்போது கரு.பழனியப்பன் பேசுகையில், ‘‘தமிழக முதல்வராக பதவியேற்று 8 மாதத்தில் பல்வேறு வளர்ச்சி பணிகளை மு.க.ஸ்டாலின் செய்துள்ளார்.
கொரோனாவையும் பொருட்படுத்தாமல், மக்களோடு மக்களாக பணியாற்றினார். மு.க. ஸ்டாலின்போல், நிர்வாகம் தெரிந்த ஒருவரால்தான் கொரோனாவிலிருந்து தமிழக மக்களை காப்பாற்ற முடிந்தது. உள்ளாட்சியிலும் திமுக நல்லாட்சி தரும் என்பதில் எந்த சந்தேகம் கிடையாது.
நகர்புற உள்ளாட்சி தேர்தலிலும், திமுக அனைத்து இடங்களிலும் வெற்றிபெறும் என்ற பயம் எடப்பாடி பழனிசாமிக்கு ஏற்பட்டுள்ளது. 10ஆண்டுகளாக எதையும் செய்யாத, முந்தைய எடப்பாடி அரசு, தற்போது திமுக அரசை குறை கூறுகிறது. உள்ளாட்சி தேர்தலில் திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை மக்கள் வெற்றிபெற செய்ய வேண்டுமாய் கேட்டுகொள்கிறேன்’’ என்றார்.
இதில் மாநில விவசாய அணி துணை தலைவர் தமிழ்மணி, மாநில நெசவாளர் அணி செயலாளர் கே.எம்.நாகராஜன், நகர பொறுப்பாளர் வடுகை பழனிசாமி, மாநில ஆதித்திராவிடர் நலக்குழு திப்பம்பட்டி ஆறுச்சாமி, தகவல் தொழில்நுட்ப அணி இணை செயலாளர் டாக்டர் மகேந்திரன், தலைமை பொதுக்குழு உறுப்பினர் அமுதபாரதி, தலைமை செயற்குழு உறுப்பினர் மு.க.முத்து, நகர துணை செயலாளர் கார்த்திகேயன், மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர் பனப்பட்டி வேலுமணி, மீணவரனி கோசி மணிகண்டன், மாவட்ட பிரதிநிதி கருப்பையா, வக்கீல் கிரி, நவநீதகிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.