செய்யாறு : செய்யாறு அருகே உல்லாசத்திற்கு இடையூறாக இருந்ததால் கள்ளக்காதலியின் மகனை சுவற்றில் அடித்து கொலை செய்ததாக கள்ளக்காதலன் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். கடலூர் மாவட்டம், மாத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சசிகுமார். இவரது மனைவி நர்மதா(26). மகன்கள் நித்திஷ்(6), சித்தார்த்(4). கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சாலை விபத்தில் சசிகுமார் இறந்துவிட்டார். கடலூர் மாவட்டம், பண்ருட்டியைச் சேர்ந்தவர் வினோத்குமார்(30). தனியார் வங்கியில் நிதி வசூல் செய்யும் பணி செய்து வருகிறார். இவரது மனைவி மீனா, மகள் காசிகா.
இந்நிலையில், கணவரை இழந்த நர்மதாவுக்கும், வினோத்குமாருக்கும் இடையே 3 ஆண்டுகளுக்கு முன்பு பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியது. அடிக்கடி தனிமையில் சந்தித்து வந்த இவர்கள், பிறகு கணவன் மனைவியாக ஒரே வீட்டில் வாழ்ந்துள்ளனர். இதற்கிடையில் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அடுத்த மாங்கால் கூட்ரோடு பகுதியில் உள்ள ஷூ கம்பெனியில் நர்மதாவுக்கு வேலை கிடைத்துள்ளது. இதனால் நர்மதா தனது 2 மகன்கள் மற்றும் கள்ளக்காதலன் வினோத்குமார் ஆகியோருடன் ஷூ தொழிற்சாலை அருகே உள்ள ஆக்கூர் கிராமத்தில் வாடகை வீட்டில் குடியேறினர். குடிப்பழக்கம் உள்ள வினோத்குமார் குடித்துவிட்டு அடிக்கடி நர்மதாவிடம் தகராறு செய்துள்ளார்.
நேற்றுமுன்தினம் காலை நர்மதா வழக்கம் போல் வேலைக்கு சென்றுவிட்டு மாலையில் வீடு திரும்பினார். அப்போது இளைய மகன் சித்தார்த் ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்தார்.
இதுகுறித்து நர்மதா தூசி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிந்து நடத்திய முதல்கட்ட விசாரணையில், கள்ளக்காதலன் வினோத்குமார் சிறுவன் சித்தார்த்தின் இரண்டு கால்களையும் பிடித்து சுவற்றில் சுழற்றி அடித்து கொடூரமாக கொன்றது தெரியவந்தது.
இதையடுத்து இன்ஸ்பெக்டர் அண்ணாதுரை, வினோத்குமாரை நேற்று முன்தினம் இரவு கைது செய்து விசாரணை நடத்தினார்.இந்த விசாரணையில் வினோத்குமார் கூறியதாக போலீசார் தெரிவித்ததாவது:நமது உல்லாசத்திற்கு இடையூறாக இருக்கும் உனது 2 மகன்களையும் எங்கேயாவது கொண்டு சென்று விட்டுவிடு என்று நர்மதாவிடம் வினோத்குமார் கூறியுள்ளார். ஆனால், இதை ஏற்க நர்மதா மறுத்துள்ளார். அதற்கு வினோத்குமார், அவ்வாறு செய்யாவிட்டால் நானே அவர்களை கொன்றுவிடுவேன் என கூறியுள்ளார். அப்போது நர்மதா அவரை சமாதானம் செய்துள்ளார்.
இந்நிலையில் நேற்றுமுன்தினம் நர்மதா வேலைக்கு சென்ற நிலையில், சித்தார்த்தை வினோத்குமார் சுவற்றில் அடித்து கொலை செய்துள்ளார் என போலீசார் தெரிவித்தனர்.
இந்நிலையில், கைது செய்யப்பட்ட வினோத் குமாரை செய்யாறு கோர்ட்டில் ஆஜர்படுத்தி நேற்று வேலூர் சிறையில் அடைத்தனர்.