திருவனந்தபுரம்: கேரளாவில் கடந்த 2013ம் ஆண்டு அச்சுதானந்தன், எதிர்க்கட்சித் தலைவராக இருந்தார். அப்போது ஒரு தனியார் டிவிக்கு அளித்த பேட்டியில், சோலார் பேனல் மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட சரிதா நாயருடன் சேர்ந்து உம்மன்சாண்டி ஒரு நிறுவனம் தொடங்கி பல லட்சம் மோசடி செய்ததாக குற்றம்சாட்டினார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த உம்மன்சாண்டி, நஷ்டஈடு கோரி அச்சுதானந்தன் மீது திருவனந்தபுரம் சார்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதை விசாரித்த நீதிமன்றம் உம்மன் சாண்டிக்கு, அச்சுதானந்தன் ரூ.10.10 லட்சம் நஷ்டஈடு வழங்க உத்தரவிட்டது. இந்த உத்தரவுக்கு தடை விதிக்க கோரி திருவனந்தபுரம் மாவட்ட முதன்மை செஷன்ஸ் நீதிமன்றத்தில் அச்சுதானந்தன் மனு தாக்கல் செய்துள்ளார். இதை நேற்று விசாரித்த நீதிமன்றம், நஷ்டஈடு உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும் என்றால் அச்சுதானந்தன் நஷ்டஈட்டுத் தொகையான ரூ.10.10 லட்சம், அதற்கான வட்டியும் சேர்த்து ரூ.14.89 லட்சம் பணம் அல்லது அதே தொகைக்கான ஜாமீனை நீதிமன்றத்தில் கட்டி வைக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.