தூத்துக்குடி: தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக முன்னாள் டிஜிபி ராஜேந்திரன் ஒரு நபர் ஆணையம் முன்பு ஆஜராகி சாட்சியம் அளித்தார். தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கி சூடு, தடியடியில் 13 பேர் பலியான விவகாரத்தில் ஓய்வு பெற்ற ஐகோர்ட் நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒரு நபர் ஆணையத்தின் 36வது கட்ட விசாரணை தூத்துக்குடி பீச் ரோடு விருந்தினர் மாளிகையில் உள்ள முகாம் அலுவலகத்தில் நடந்து வருகிறது. இதில், முன்னாள் டிஜிபி ராஜேந்திரன், நேற்று காலை ஆணையம் முன்பு ஆஜரானார். அவரிடம் மட்டும் நேற்று விசாரணை நடத்தப்பட்டது. இன்று முன்னாள் உள்துறை செயலர் நிரஞ்சன் மார்டி, நாளை முன்னாள் பொதுத்துறை செயலாளர் செந்தில்குமார், சிறுதொழில் ஆணைய தலைவர் விஜயகுமார், நாளை மறுநாள் சிபிஐ டிஎஸ்பி ரவி ஆகியோரிடம் விசாரணை நடத்துவதற்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. விசாரணை வரும் 18ம் தேதி வரை நடக்கிறது.